Wednesday, October 18, 2023

1252. இரக்கம் இல்லாதவர்கள்!

"ஏண்டி, இன்னிக்கு வயல் வேலை முடிஞ்சு வர இவ்வளவு நேரமாயிடுச்சு?" என்றாள் சிவகாமி.

"என்ன செய்யறது? முழுசாக் களை எடுத்துட்டுத்தான் போகணும்னுட்டாரு பண்ணை மேலாளர். களை எடுக்கற வேலைதானே, மீதியை நாளைக்குச் செய்யறோம்னா கேக்க மாட்டேன்னுட்டாரு. நாங்க அஞ்சாறு பொம்பளைங்க பசியோட இருட்டுற வரை வயல்ல வேலை செஞ்சுட்டு வரோம். பொம்பளைங்களாச்சே, அவங்களை இவ்வளவு வேலை வாங்கறோமேங்கற எண்ணமோ, அவங்க வீட்டுக்குப் போயி எல்லாருக்கும் சோறாக்கணுமே, குழந்தைங்க பசியோட  இருப்பாங்களேங்கற கரிசனமோ கிடையாது. கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத மனுஷன்" என்று பொரிந்து தள்ளினாள் அவள் தோழி வள்ளி.

"சில பேரு அப்படித்தான் இரக்கம் இல்லாம இருப்பாங்க!"

"நீ வசதியான வீட்டுப் பொண்ணு. நீ என்னிக்கு வயல் வேலைக்குப் போயிருக்க? ரொம்ப அனுபவப்பட்டவ மாதிரி பேசற!"

"வயல் வேலைக்குப் போனாதான் இதெல்லாம் தெரியணுமா என்ன? உன்னை இருட்டினப்பறம் கூட வேலை வாங்கின மனுஷரை இரக்கம் இல்லாதவர்னு சொல்ற. நடுராத்திரின்னு கூடப் பார்க்காம நம்மைக் கஷ்டப்படுத்தறவங்க இருக்காங்க!"

"அது யாருடி நடுராத்திரியில வந்து கஷ்டப்படுத்தறது? கனவில வந்து கஷ்டப்படுத்தறவங்களைச் சொல்றியா?" என்றாள் வள்ளி சிரித்தபடி.

'தூங்கினால்தானே கனவு வரும்? தூக்கமே வர விடாமல் நள்ளிரவில் கூட என் மனதில் புகுந்து கொண்டு கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் என்னை வாட்டி எடுக்கும் காம வேட்கையைப் பற்றி என்னால் உன்னிடம் எப்படிச் சொல்ல முடியும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட சிவகாமி, "ஆமாம்" என்று சொல்லிச் சமாளித்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1252
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.

பொருள்:
காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...