Tuesday, October 17, 2023

1251.கதவைப் பிளந்த கோடரி!

நடந்ததை நினைத்து காதம்பரிக்கு இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை.

குருநாதன் மீது அவளுக்குச் சிறிது காலமாகவே காதல் இருந்தது உண்மைதான். 

குருநாதனைப் பார்த்தபோதெல்லாம் அவள் மனதுக்குள் ஏற்பட்ட புளகாங்கிதமும், உடலில் ஏற்பட்ட சிலிர்ப்பும் அந்தக் காதலை உறுதி செய்வதாகவே இருந்தன,

காதம்பரியைப் பார்த்தபோதெல்லாம் குருநாதனின் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியும், அவன் உடலில் தெரிந்த பரபரப்பும் குருநாதனுமத்ததன் மீது காதல் கொண்டிருப்பது காதம்பரிக்குப் புரிந்தது.

ஆயினும் காதம்பரி குருநாதனை நேரில் சந்திப்பதைத் தவிர்த்தே வந்தாள். அப்படியே சந்திக்க நேர்ந்தாலும் சட்டென்று விலகிப் போய் விடுவாள்.

தன் காதலைக் கட்டுப்படுத்திக் கொண்டு பெண்மைக்கு உரிய நாணத்தைப் பாதுகாக்கும் விதத்தில் தான் நடந்து கொண்டது காதம்பரிக்குச் சற்றுப் பெருமையாகக் கூட இருந்தது.

அப்படி இருக்கையில்தான், நேற்று அந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது.

ஒரு தனிமையான இடத்தில் இருவரும் தற்செயலாகச் சந்தித்தபோது, காதம்பரியின் கரத்தைப் பற்றிய குருநாதன், "என்ன காதம்பரி, எப்போது என்னைப் பார்த்தாலும் ஏன் ஓட்டமெடுக்கிறாய்? உனக்கு என் மீது விருப்பம் இல்லையா?" என்று கேட்டான்.

அப்போதே தன் கையை விடுவித்துக் கொண்டு அவள் விலகி இருக்க வேண்டும். ஆனால் அவள் அப்படிச் செய்யாமல் தலைகுனிந்தபடி அமைதியாக நின்றது குருநாதனுக்கு இன்னும் சற்றுத் துணிவைக் கொடுதிருக்க வேண்டும்!

சட்டென்று காதம்பரியை இறுகத் தழுவிக் கொண்டு விட்டான்.

ஆனால் அப்போதும் காதம்பரி தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு அவனேதான் அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவித்தான். அதற்குப் பிறகுதான் காதம்பரி சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி வந்தாள்.

'இப்படி ஒரு சம்பவம் நிகழ எப்படி அனுமதித்தேன்? எனக்குத் துணையாக நின்று என்னைப் பாதுகாக்க வேண்டிய நாணம் எங்கே போயிற்று?'

இந்தக் கேள்வி திரும்பத் திரும்ப காதம்பரியின் மனதில் எழுந்து அவளைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கியது.

"ஒரே அடிதான். கதவு உடைஞ்சு விழுந்திடுச்சு!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள் காரம்பரியின் தாய்.

"என்ன ஆச்சு? எந்தக் கதவு உடைஞ்சது?" என்றாள் காதம்பரி ஏதும் புரியாமல்.

"எதிர்த்த வீட்டுக் கனகவல்லி  வீட்டிலேந்து வாசலுக்கு வந்தப்ப, அவளோட ரெண்டு வயசுக் குழந்தை உள்ளே இருந்துக்கிட்டுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுடுச்சு. குழந்தையால தாழ்ப்பாளைத் திறக்க முடியல. உள்ளே இருந்துக்கிட்டு பயந்து அழ ஆரம்பிச்சுடுச்சு. கனகவல்லிக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. அவ புருஷன் வேற ஊர்ல இல்ல."

"அப்புறம்?"

"யாரோ போய் விறகுக்கடையிலேந்து கோடாலியை எடுத்துக்கிட்டு வந்து கதவு மேல ஒரு போடு போட்டாங்க. அவ்வளவுதான் கதவு உடைஞ்சு விழுந்துடுச்சு. பாவம், அவங்க புதுசாக் கதவு போடணும்!"

'ஓ, என் நாணத்தையும் மீறிக் காதலன் அணைப்புக்குள் நான் போனதும் இப்படித்தானோ? நாணம் என்ற தாழ்ப்பாள் பொருத்தப்பட்ட என் மன உறுதி என்ற கதவு, காமம் என்ற கோடரியில்தான் பிளக்கப்பட்டதோ!' என்று நினைத்துக் கொண்டாள் காதம்பரி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 126
நிறையழிதல்
குறள் 1251
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.

பொருள்:
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்ற கதவை காமம் என்ற கோடாலி உடைத்து விடுகிறதே.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...