Tuesday, October 17, 2023

1250. உடல் இளைக்கக் காரணம்

காந்திமதியை மருத்துவிடம் அழைத்துச் சென்றாள் அவள் தாய் உலகநாயகி.

"கொஞ்சநாளா மெலிஞ்சுக்கிட்டே வரா ஐயா! நானும் சத்துள்ள உணவெல்லாம் கொடுத்துப் பாக்கறேன். ஆனா ஒரு முன்னேற்றமும் இல்லை!" என்றாள் உலகநாயகி  மருத்துவரிடம்.

காந்திமதியைப் பரிசீலித்துப் பார்த்த மருத்துவர், "வயித்தில கட்டி இருக்கும்னு நினைக்கறேன். அதனாலதான் சாப்பிடற உணவு எதுவும் உடம்பில ஒட்ட மாட்டேங்குது. சாப்பிடற சாப்பாட்டை எல்லாம் கட்டி உறிஞ்சிக்குது. கட்டியைக் கரைக்க சூரணம் தரேன். ரெண்டு மூணு மாசத்தில கட்டி கரைஞ்சுடும்" என்றார் மருத்துவர்.

ரவில் காந்திமதி தனிமையில் இருந்தபோது தன் நெஞ்சுடன் உரையாடினாள்:

'வயிற்றில் இருக்கும் கட்டியினால்தான் நான் மெலிந்து வருவாக மருத்துவர் சொல்கிறார். அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். உனக்கும் எனக்கும்தானே உண்மை தெரியும்!

'காதலர் நம்மைப் பிரிந்து வெளியூர் சென்றதிலிருந்து அவரை நெஞ்சிலேயே நிறுத்தி அவர் பிரிவை நினைத்து வருந்துவதால்தான் என் உடல் இளைத்துக் கொண்டே வருகிறது. அம்மா எனக்குக் கொடுக்கும் சத்துள்ள உணவுகளை உறிஞ்சுவது என் வயிற்றில் உள்ள கட்டி அல்ல, நெஞ்சில் உள்ள அந்தக் கல்மனம் கொண்டவர்தான்.

'நம் மீது இரக்கம் இல்லாமல், நம்மைப் பற்றிய நினைவில்லாமல் நம்மைக் கைவிட்டு விட்ட அவரைக் கைவிடாமல் அவரை நாம் இன்னும் நெஞ்சில் வைத்துப் போற்றி வருகிறோம். அவர் நினைவை நெஞ்சை விட்டு நாம் அகற்றாதவரை என் உடல் இளைப்பது நிற்கப் போவதில்லை.

'ஒருவேளை சில மாதங்களுக்குப் பிறகு அவர் திரும்பி வந்து விட்டால் ஒரு வேடிக்கை நிகழும். அப்போது என் உடல் மெலிவது நின்று விடும். தான் கொடுத்த சூரணத்தால் வயிற்றில் உள்ள கட்டி கரைந்ததால்தான் என் உடல் மெலிந்து வருவது நின்றது என்று மருத்துவர் நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்வார்.'

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1250
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

பொருள்:
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருப்பதால் இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...