Sunday, October 15, 2023

1248. போய் வா நெஞ்சே, போய்வா!

நான் எவ்வளவோ தடுத்தும் நீ ஒரு நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளத் தீர்மானித்து விட்டாய்.

உனக்கு அவர் இருக்கும் இடமே தெரியாது, கடல்தாண்டிச் செல்தாகச் சொன்னாரே தவிர, குறிப்பாக எந்த ஊருக்குப் போகப் போகிறார் என்று சொல்லவில்லை. 

அவர் இங்கிருந்து கிளம்பியபோது அது அவருக்கே தெரியாது. நீ எப்படி அவரைத் தேடிக் கண்டுபிடிக்கப் போகிறாய் என்றே தெரியவில்லை.

அப்படியே அவர் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தாலும் என்ன பயன்?

பிரிவு என்னும் பெரும் துயரத்தை அளித்து விட்டுப் போனவர், அந்தத் துயரைப் போக்கும் வகையில் திரும்பி வந்து அன்பு செலுத்தவில்லையே என்ற உன் ஏக்கம் நியாயமானதுதான்.

அதற்காக அவரைப் பின் தொடர்ந்து போவதால் என்ன பயன்? உன் துன்பத்தை உணர்ந்து உன் மீது அன்பு செலுத்தாதவர் தொலைவில் இருந்தால் என்ன, அருகில் இருந்தால் என்ன?

அதனால் அவர் இருக்கும் இடத்துக்குச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை. இதை உனக்கு நான் எத்தனையோ முறை எடுத்துச் சொல்லி விட்டேன். ஆயினும் பிடிவாதமாகக் கிளம்பி விட்டாய்.

சென்று வா, என் அருமை நெஞ்சே! உன்னைப் போன்ற பேதையிடம் நான் வேறு என்ன சொல்ல முடியும்!

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1248
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

பொருள்:
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி, பிரிந்தவரின் பின் செல்கின்றாய், பேதை.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...