Saturday, October 14, 2023

1247. இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு!

"அதோ, அவர் இந்தப் பக்கமாக வந்து கொண்டிருக்கிறார். அவர் அருகில் வந்ததும், அவரிடம் போய், என் காதலைச் சொல்லி விடப் போகிறேன்!"

"முட்டாள் பெண்ணே! அப்படி எல்லாம் செய்து விடாதே! அப்படிச் செய்தால், நாணம் என்ற உன் இயல்பான பண்பை நீ விட்டு விட்டதாக ஆகும்!"

"பிறகு, எப்படி என் காதலை அவரிடம் சொல்வது?"

"காத்திரு. அவரே வந்து உன்னிடம் தன் காதலைச் சொல்கிறாரா என்று பார்க்கலாம்!"

"காத்திருந்து பார்த்து விட்டேன். அவராக என்னிடம் வந்து காதலைச் சொல்வது போல் தெரியவில்லை. ஒருவேளை, அவருக்கு என் மீது அத்தகைய எண்ணம் இல்லையோ என்னவோ! ஆனால், நான் போய் என் காதலைச் சொன்னால், அவர் அதை ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?"

"ஏற்றுக் கொள்ளலாம்தான்! ஆனால் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, நாணத்தை விட்டு விட்டு, அவரிடம் போய் உன் காதலை எப்படிச் சொல்ல முடியும்?"

"பிறகு வேறு என்ன செய்வது? அவரும் என்னிடம் காதலைச் சொல்ல மாட்டார். நானும் சொல்லக் கூடாது என்றால், இதற்கு ஒரு வழிதான் இருகிறது!"

"அது என்ன வழி?"

"அவர் மீது நான் கொண்டிருக்கும் காதலை விட்டு விட வேண்டியதுதான்!"

"அது இயலாத செயல். உனக்கு அவர் மீது இருக்கும் காதல் எவ்வளவு ஆழமானது என்று எனக்குத்தானே தெரியும்?"

"இங்கே பார்! உன் வழிகாட்டலின்படிதான் நான் நடக்க வேண்டி இருக்கிறது. என் காதலை அவரிடம் சொல்ல விடாமல், நாணம் என்ற தடையை உருவாக்கி வைத்திருக்கிறாய். சரி, காதலை விட்டு விடலாம் என்றால், அதை உனக்குள் ஒரு ஆழமான இடத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, அதை விட முடியாது என்கிறாய். நல்ல நெஞ்சாக வந்து வாய்த்திருக்கிறாய் எனக்கு! ஒன்று, காதலை விட்டு விட்டதாகச் சொல். அல்லது, நாணத்தை விட்டு விட்டதாகச் சொல். இந்த இரண்டையும் ஒருசேர வைத்துக் கொண்டு இருக்க என்னால் முடியவில்லை!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1247
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

பொருள்:
நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...