Friday, October 13, 2023

1245. அது எப்படி இயலும்?

"உன் கணவர் உன்னை விட்டுப் பிரிந்து சென்று எத்தனை நாட்கள் ஆகி விட்டன?"

"ஆறு மாதங்கள்!"

"இந்த ஆறு மாதங்களில் அவர் உனக்கு ஏதாவது மடல் அனுப்பி இருக்கிறாரா?"

"இல்லை."

"நீ அவருக்கு மடல் அனுப்பினாய் அல்லவா?"

"ஆமாம். இங்கிருந்து அவர் இருக்கும் இடத்துக்குச் சென்றவர்கள் மூலம் இரண்டு மடல்கள் அனுப்பினேன்."

"உன்னிடம் மடல் பெற்றுச் சென்றவர்கள் திரும்பி வந்தபோது அவர்கள் உன்னிடம் சொன்ன செய்தி என்ன?"

"என் மடலை அவர் படித்துப் பார்த்தாராம். ஆனால் எதுவும் சொல்லவில்லையாம். அவர்கள் ஊருக்குக் கிளம்பும்போது உன் மனைவிக்கு ஏதேனும் மடல் உண்டா என்று அவரிடம் கேட்டதற்கு அவர் எதுவும் இல்லை என்று சொல்லி விட்டாராம். சரி, ஏதாவது செய்தி சொல்ல வேண்டுமா என்று கேட்டதற்கும், அவர் வேண்டாம் என்பது போல் தலையாட்டினாராம்."

"இதிலிருந்து என்ன தெரிகிறது?"

"என்ன தெரிகிறது?"

"நீதான் அவர் மீது அளவு கடந்த விருப்பம் வைத்துப் பைத்தியம் போல் இருக்கிறாயே தவிர, அவருக்கு உன் மீது சிறிது கூட விருப்பம் இல்லை. அதனால்..."

"அதனால்...?"

"நீயும் உனக்கு அவர் மீது இருக்கும் விருப்பத்தைக் கைவிட்டு விடு!"

""என் கணவர் என் மீது விருப்பம் இல்லாமல் நடந்து கொள்கிறார் என்பதற்காக, நான் அவர் மீது கொண்டுள்ள காதலை விட்டு விட முடியுமா என்ன? நெஞ்சே! நீ  எனக்கு நன்மையை மட்டுமே நினைப்பாய் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீ சொல்லும் யோசனை எனக்கு நஞ்சாக அல்லவா இருக்கிறது! உன்னுடன் அளவளாவுவதே தவறு போலிருக்கிறது!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1245
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

பொருள்:
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...