Thursday, October 12, 2023

1243. நெஞ்சமே, நினைப்பதைக் கொஞ்சம் நிறுத்தி விடு!

வைரவனுடன் வியாபாரத்துக்காகக் கடல் கடந்து சென்ற செந்திலேவேலர் வந்து விட்டாராம். அவரிடம் தன் கணவன் வைரவன் ஏதாவது செய்தி சொல்லி இருப்பான் என்ற நம்பிக்கையில் ஆவலுடன் அவரைப் பார்க்க விரைந்தாள் வானதி. அவள் தாயும் உடன் வந்தாள்.

ஆனால் செந்தில்வேலரிடம் வைரவன் எந்தச் சேதியும் சொல்லி அனுப்பவில்லை.

'நான் ஊருக்குப் போறேன்? நீ எப்ப வருவேன்னு உன் வீட்டில சொல்லட்டும்?' என்று செந்தில்வேலர் கேட்டதற்கு, 'அதை இப்ப எப்படி சொல்ல முடியும்? நான் வியாபார விஷயமா இங்கே இன்னும் நிறையப் பேரைப் பார்க்க வேண்டி இருக்கே!' என்று வைரவன் பதில் சொல்லி விட்டானாம்.

"கவலைப்படாதேம்மா! சீக்கிரம் வந்துடுவான்" என்று அவளுக்கு ஆறுதல் மொழி கூறினார் செந்தில்வேலர். 

'நான் சீக்கிரம் வந்துடுவேன். கவலைப்பட வேண்டாம்னு என் மனைவிகிட்ட சொல்லுங்க!' என்று வைரவன் அவரிடம் செய்தி சொல்லி அனுப்பி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

'ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை! என்னிடம் அன்பு இருந்தால் செய்திருப்பார். அவரிடம்தான் அது இல்லையே!' என்று நொந்து கொண்டே வீட்டுக்குத் திரும்பினாள் வானதி.

வீட்டுக்குச் சென்றதும் வெகுநேரம் இந்தச் சிந்தனையாகவே இருந்தது. வேறு சிந்தனையிலேயே மனம் செல்லவில்லை.

வானதிக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது.

'பிரிவுத் துயரை எனக்குக் கொடுத்து விட்டு அவர் போய் விட்டார். அவருக்கு என் நினைவு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நான் ஏன் இப்படி அவரை நினைத்து வருந்துகிறேன்? இதற்குக் காரணம் என் செஞ்சம்தானே?'

வானதி குனிந்து தன் நெஞ்சைப் பார்த்துப் பேசினாள்.

"ஏ நெஞ்சே! என்னை நினைக்காதவரை நீ ஏன் நினைத்து வருந்துகிறாய்? ஒன்று அவரை நினைத்து வருந்துவதை நிறுத்து. அல்லது அவர் இருக்கும் இடத்துக்கு நீயும் சென்று விடு. என்னுடன் இருந்து கொண்டு என்னை வருத்தாதே!"

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 125
நெஞ்சொடு கிளத்தல்
குறள் 1243
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

பொருள்:
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...