"சரியா சாப்பிட மாட்டேங்கறா, ஐயா. சரியா தூங்கறதும் இல்லை. உடம்பு இளைச்சுக்கிட்டே வருது. எலும்பெல்லாம் தெரியுது. உடம்பெல்லாம் வெளிறிப் போய், சோகை புடிச்சவ மாதிரி இருக்கா!" என்பார் அம்மா.
மருத்துவர் என் நாடியைப் பிடித்துப் பார்ப்பார். பிறகு ஏதோ ஒரு சூரணத்தைக் கொடுத்து, அதைத் தேனில் குழைத்து, தினமும் மூன்று வேளை அருந்தச் சொல்வார்.
மருத்துவர் சொன்னபடி, அம்மா ஒரு நாளைக்கு மூன்று வேளை ஒரு சிட்டிகை சூரணத்தை எடுத்து, ஒரு வெற்றிலையில் வைத்து, அதில் தேனை விட்டுக் குழைத்து, என்னிடம் கொடுப்பார். "அப்படியே வெற்றிலையோடு மென்று விழுங்கு!" என்பார்.
ஒரு மாதம் பார்த்து விட்டு, முன்னேற்றம் ஏதும் இல்லாததால், இன்னொரு மருத்துவரிடம் அழைத்துச் செல்வார். அவரும் ஒரு சூரணம் கொடுப்பார்.
இது போல் மூன்று மருத்துவர்களிடம் போய் வந்தாகி விட்டது.
அம்மாவை நான்காவதாக இன்னொரு மருத்துவரிடம் செல்ல வைத்து, அலைக்கழிக்க நான் விரும்பவில்லை.
எனக்கு வந்திருப்பது என்ன நோய் என்பதை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம்.
ஆனால் அதை அறிந்த ஒரு நபர் இருக்கிறார். அதுவும் என்னுள்ளேயே இருக்கிறார்!
அது யார் தெரிகிறதா?
ஏ, நெஞ்சே! உன்னிடம்தானே பேசிக் கொண்டிருக்கிறேன்? அது நீயேதான்!
எனக்கு வந்திருப்பது காதல் நோய் என்பதை நீ அறிவாய். நோய் என்னவென்று தெரிந்த உனக்கு, நோய்க்கான மருந்து என்ன என்பதும் தெரிந்திருக்க வேண்டுமே! அது என்னவென்று என்னிடம் சொல்.
மருந்து என்ன என்பதை நீ சொன்னால், அதை உட்கொண்டு என்னை வாட்டும் இந்தக் காதல் நோயிலிருந்து குணமடைவேன். அம்மாவின் கவலை தீர்ந்து அவரும் மகிழ்ச்சியாக இருப்பார்.
கற்பியல்
நெஞ்சொடு கிளத்தல்
பொருள்:
நெஞ்சே! எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து உன்னால் சொல்ல முடியுமா?
No comments:
Post a Comment