Sunday, October 8, 2023

1240. நேற்று நெற்றி, இன்று கண்கள்!

"என்னடி உன் நெற்றி வெளிரிப் போயிருக்கு? உடம்பு சரியில்லையா என்ன?" 

கோதையைப் பார்த்துப் பலரும் இவ்வாறு கேட்டது நேற்று.

நெற்றி பசலை நிறம் அடைந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. 

நேற்று கோதை தன் காதலன் ரகுவர்மன் அணைப்பில் இருந்தபோது, வாயிற்கதவு படபடவென்று தட்டப்பட்டது.

ரகுவர்மன் கதவைத் திறந்து பார்த்தான். அங்கே நின்ற அரண்மனைச் சேவகன் அரண்மனையின் பாதுகாப்புத் தலைவர் ரகுவர்மனை உடனே அழைத்து வரும்படி பணித்தாகக் கூறினான். உடனே ரகுவர்மன் கிளம்பி விட்டான். 

இனி ரகுவர்மன் எப்போது வீட்டுக்குத் திரும்புவானோ தெரியாது. அன்றே திரும்பலாம், சில நாட்கள் கழித்தும் திரும்பலாம். அரண்மனைக் காவல் பணி அத்தகையது.

கூடியிருந்த காதலன் விட்டு விட்டுச் சென்று விட்டான், எப்போது திரும்புவானோ தெரியாது என்பதால் தன் நெற்றியில் பசலை படர்ந்திருக்கிறது என்பதை வெளியில் சொல்ல முடியாமல், கோதை, தான் பூசிக் குளித்த மஞ்சளின் தன்மை மாறுபட்டிருந்ததால் அந்த மாற்றம் ஏற்பட்டதாகச் சொல்லிச் சமாளித்தாள்.

னால் இன்று காலை கோதை கண்ணாடியைப் பார்த்தபோது தன் கண்களிலும் வெளிர் நிறம் படர்ந்திருப்பதைக் கண்டாள்.

நெற்றியின் பசலையைக் கண்டதும் அருகிலிருந்த கண்களுக்கும் பசலை வரத் தொடங்கி விட்டது போலும்!

'நேற்று நெற்றியில் படர்ந்த பசலைக்கு மஞ்சளைக் காரணம் காட்டிச் சமாளித்து விட்டேன். இன்று கண்களின் பசலைக்கு என்ன காரணம் கூறப் போகிறேன்?' என்று எண்ணிக் கவலை அடைந்தாள் கோதை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 124
உறுப்பு நலனழிதல்
குறள் 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

பொருள்:
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...