"திரைச்சீலையால காற்றைத் தடுக்க முடியாதே!" என்றான் செம்பியன்.
"காற்று அடிச்சா என்ன? இப்ப குளிர்காலம் இல்லையே!"
"நேத்திக்கு நான் உன்னை அணைச்சுக்கிட்டப்ப, காற்று அடிச்சது. அப்புறம் பார்த்தா, உன் கண்கள் வெளிறிப் போயிருந்தது. ஒருவேளை, இந்தக் குளிர் காற்று உன் உடம்புக்கு ஒத்துக்கலையோன்னு நினைச்சேன்."
"என் கண்கள் வெளிறி, நிறம் மாறினதுக்குக் காரணம் காற்று இல்லை, எனக்கு ஏற்பட்ட பசலை."
"அப்படின்னா?"
"இது தெரியாதா? காதலனைப் பிரியறப்ப, ஒரு பெண்ணுக்குப் பசலை நோய் வரும். உடம்பெல்லாம் நிறம் மாறும்."
"நான் எங்கே உன்னைப் பிரிஞ்சேன்? உன்னைத் தழுவிக்கிட்டுத்தானே இருந்தேன்?"
"நீங்க என்னைத் தழுவிக்கிட்டிருக்கறப்பவே, குறுக்கே வந்த குளிர் காற்று நம்மைப் பிரிச்சுது இல்ல? அதனால ஏற்பட்டதுதான் அந்தப் பசலை!"
"அப்படியா? அப்ப நான் சாளரத்தை அடைக்கிறது சரிதானே?"
"அதுக்கு ஏன் சாளரத்தை அடைக்கணும்? காற்றைத் தடுக்க வேற ஒரு எளிய வழி இருக்கே!"
"என்ன வழி?"
"நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில காற்று நுழைய வழியே இல்லாம செய்யறது!" என்று கூறி. நாணத்துடன் கைகளால் முகத்தைப் பொத்திக் கொண்டாள் கயல்விழி.
கற்பியல்
உறுப்பு நலனழிதல்
பொருள்:
இறுகத் தழுவியிருந்தபோது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால், அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.
No comments:
Post a Comment