Wednesday, May 24, 2023

1192. மழையினில் நனைந்து...

"நாலு மாசமா அவ பின்னால அலையறேன். திரும்பிக் கூடப் பாக்க மாட்டேங்கறா!" என்றான் விநாயக்.

"அப்ப அவளை விட்டுட்டு வேற பொண்ணைப் பாக்க வேண்டியதுதானே?" என்றான் கல்யாண்.

"இப்படியெல்லாம் பேசினா, உன்னை விட்டுட்டு வேற நண்பனைத் தேடிக்க வேண்டி இருக்கும்!" என்றான் விநாயக் கோபமாக.

"அடேயப்பா! என்னையே தூக்கிப் போட்டுடுவேங்கற! காதல்ல அவ்வளவு ஈடுபாடா? 2023-இல இப்படி ஒரு காதலா?"

"நீ கிண்டலாச் சொன்னாலும் உண்மை அதுதான். உண்மையான காதல்ங்கறது எல்லாக் காலத்திலேயும் இருக்கும். கி.மு. 2023-இல மட்டும்தான் இருந்ததுன்னு நினைக்காதே. கி,பி. 2023-இலேயும் இருக்கு."

"சாரி. எனக்குத் தெரியாது. எனக்கு அந்த அனுபவமே இன்னும் வரல. சரி, ஒருவேளை அவ உன் காதலை ஏத்துக்கலேன்னா?" என்றான் கல்யாண்.

ஒரு நிமிடம் யோசித்த விநாயக், "தெரியல. மழை பேஞ்சாதான் உலகத்தில உள்ள உயிர்கள் எல்லாம் பிழைக்க முடியும். 'ஒருவேளை மழை பெய்யலேன்னா?'ன்னு கேட்டா என்ன பதில் சொல்ல முடியும்?" என்றான்.

"டேய் கல்யாண்! அவ என் காதலை ஏத்துக்கிட்டாடா!" என்றான் விநாயக் உற்சாகமாக.

"வாழ்த்துக்கள்!" என்ற கல்யாண், வெளியே பார்த்து விட்டு, "அன்னிக்கு 'உன் காதலை உன் காதலி ஏத்துக்கலேன்னா?'ன்னு நான் கேட்டதுக்கு, 'மழை பெய்யலேன்னா என்ன ஆகும்?'னு பதில் கேள்வி கேட்ட. இன்னிக்கு உன் காதலி உன் காதலை ஏத்துக்கிட்ட செய்தியை நீ எங்கிட்ட சொல்றப்ப மழை பெய்யுது. நல்ல பொருத்தம்தான்!" என்றான் விநாயக்.

"என் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்தறதுன்னு தெரியல. மழையில நனையறதை விட மகிழ்ச்சியான விஷயம் வேற என்ன இருக்கு? அதனால நான் கொஞ்ச நேரம் மழையில நனைஞ்சு என் மகிழ்ச்சியைக் கொண்டாடிட்டு வரேன்!' என்றபடியே வெளியே ஓடினான்  விநாயக்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 120
தனிப்படர் மிகுதி
 (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)

குறள் 1192
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

பொருள்:
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உலகில் வாழ்பவர்களுக்கு மேகம் மழை பெய்து அவர்களைக் காப்பாற்றுதலைப் போன்றது.

(குறிப்பு; இந்தக் குறள் ஒரு பெண்ணைப் பற்றி எழுதப்பட்டிருந்தாலும், இந்த உணர்வு ஒரு ஆணுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது)

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...