"என்னை ஒத்தன் துரத்தித் துரத்திக் காதலிக்கிறான். ஆனா, அவனை எனக்குப் பிடிக்கலையே!" என்றாள் ரஞ்சிதா.
"என் விஷயத்திலேயும் முதல்ல அப்படித்தான் ஆச்சு. ரமேஷ் என் பின்னால அலைஞ்சுக்கிட்டிருந்தப்ப, ஆரம்பத்தில எனக்கு அவன் மேல அவ்வளவா ஈடுபாடு இல்ல. ஆனா கொஞ்ச நாள்ள, எனக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு! இப்ப நாங்க மனம் ஒத்த காதலர்கள்!" என்றாள் பிரியா.
"அவனை விட்டுட்டா வேற ஆள் கிடைக்க மாட்டான்னு நினைச்சு பயந்து அவனோட காதலையே ஏத்துக்கறதுங்கற முடிவுக்கு வந்திருப்ப!" என்றாள் மதுவந்தி.
"ஏய்!" என்று பொய்க் கோபத்துடன் கையை ஓங்கிய பிரியா, "சாப்பிட்டுட்டு வந்து உன்னை வச்சுக்கறேன்!" என்று கூறி, ஓங்கிய கையை இறக்கினாள்.
"நான் உங்களை மாதிரில்லாம் இல்லப்பா. நான்தான் ரகுவை முதல்ல விரும்பினேன். எனக்கு அவர் மேல ஈடுபாடு இருக்குன்னு தெரிஞ்சதும், அவரும் என்னை விரும்ப ஆரம்பிச்சுட்டாரு. இப்ப நாங்க எங்க கல்யாணத்தைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம்!" என்றாள் நந்தினி.
"அதான் எங்களை மாதிரில்லாம் காதலனை அவன் இவன்னு பேசாம ரொம்ப மரியாதையா அவர் இவர்னு பேசறே. சரியான தர்மபத்தினிதான் நீ!" என்ற ரஞ்சிதா, வாணியிடம் திரும்பி, "என்னடி, நாங்கள்ளாம் எங்க காதலைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கோம். நீ மட்டும் மௌனமா இருக்கே!" என்றாள்.
"அவ ரொம்ப மும்முரமா திராட்சைப் பழத்தை சாப்பிட்டிருக்கறதைப் பாத்தா அந்த திராட்சைப் பழம் ரொம்ப சுவையா இருக்கும் போலருக்கு. அதான் அதோட சுவையில ஈடுபட்டிருக்கா!" என்றபடியே, அவள் முன்பிருந்த தட்டிலிருந்து ஒரு திராட்சையை எடுத்து வாயில் போட்டுக் கொண்ட நந்தினி, "ஆஹா! ரொம்ப இனிப்பா இருக்கே! சீட்லெஸ் வேற. எனக்கு திராட்சையில விதை இருந்தாலே பிடிக்காது. சீட்லெஸ் கிரேப்ஸ்தான் பெஸ்ட்!" என்று சொல்லி, இன்னொரு திராட்சையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
"உனக்கென்ன? உன் காதலும் இந்த விதையில்லா திராட்சை மாதிரி இனிப்பா, தடை இல்லாததா அமைஞ்சிடுச்சு!" என்ற வாணி, 'என்னை மாதிரியா? நான் விரும்பற காதலன் இன்னும் என்னை விரும்பலையேன்னு நான் ஏங்கிக்கிட்டிருக்கேன்! என் சோகத்தை நான் எப்படி உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியும்?' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
எல்லோரையும் பொதுவாகப் பார்த்து, "உங்களை மாதிரியெல்லாம் எங்கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்லை!" என்றாள் வாணி.
கற்பியல்
தனிப்படர் மிகுதி (தனியாக வருந்தும் துன்பத்தின் மிகுதி)
பொருள்:
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.
No comments:
Post a Comment