Sunday, May 14, 2023

1190. கேட்டதும், கேட்காததும்!

"புருஷன் ஊருக்குப் போனதிலேந்து வீட்டை விட்டு எங்கேயும் வெளியில போகாம இருந்தே. இன்னிக்கு நீயே வெளியில போயிட்டு வரேன்னு கிளம்பி இருக்க. ரொம்ப நல்லது. அப்பதான் உனக்கு ஒரு மாறுதலா இருக்கும். இந்த பத்து நாள்ள உன் தோல் வெளிறி நிறம் மாறி இருக்கு. உடம்பில கொஞ்சம் வெய்யில் பட்டா அது கூட சரியாயிடும்னு நினைக்கிறேன்!" என்றாள் மரகதம்.

பூங்கொடி எதுவும் சொல்லாமல் வெளியில் கிளம்பினாள்.

சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய பூங்கொடியின் முகத்தில் ஒரு தெளிவு காணப்பட்டது. பத்து நாட்களாக முகத்தில் அப்பியிருந்த சோகம் கூட சற்றுக் கலைந்திருந்தாற்போல் தோன்றியது.

'வெளியில் போனால் யாராவது ஏதாவது பேசி இவள் சோகத்தை அதிகமாக்கி விடுவார்களோ என்று பயந்தேன். நல்லவேளை அப்படி நடக்கவில்லை!" என்று நினைத்துக் கொண்டாள் மரகதம்.

"வழியில யாரையாவது பாத்தியா? ஏதாவது கேட்டங்களா?" என்றாள் மரகதம்.

"பாத்தேன். எல்லாருமே எனக்கு வந்திருக்கிற பசலை நோயைப் பத்தித்தான் கேட்டாங்க. ஏன் உடம்பு இப்படி இளைச்சிருக்கு, ஏன் கண் சிவந்திருக்கு, ஏன் தோல் வெளுத்திருக்குன்னெல்லாம் கேட்டாங்க."

"வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டாங்களே! அதையெல்லாம் நீ பொருட்படுத்தாதே!"

"இல்லம்மா! 'உன் சம்மதத்தோடதான் உன் புருஷன் உன்னைப் பிரிஞ்சு போனாரு, அப்புறம் ஏன் உனக்கு இந்தப் பசலை வந்திருக்கு'ன்னு கேட்டாங்களே தவிர, 'உன் புருஷன் உன்னைப் தனியா விட்டுட்டுப் போயிட்டாரே, அவருக்கு உன் மேல அன்பு இல்லையா?'ன்னு யாருமே கேக்கல, அதுவே எனக்கு ஆறுதலா இருக்கு!" என்றாள் பூங்கொடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1190
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

பொருள்:
என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்ற மாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லதுதான்!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...