Saturday, May 13, 2023

1189. நானும் அப்படித்தானே இருந்தேன்!

கணவன் பிரிந்து சென்ற இரண்டு மாதங்களாக மங்கை அனுபவித்து வந்த வேதனையை அவள் உடல் மாற்றங்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

தூக்கம் இல்லாததால் எப்போதும் சோர்வுடன் காணப்படும் கண்கள், சரியாக உணவு அருந்தாததால் இளைத்துப் போன உடல், வெளிறிப் போய் நிறம் மாறிய சருமம் என்று பசலை நோயின் தாக்கம் அவள் மீது முழுவதுமாகப் படர்ந்திருந்தது.

"நல்லா இருந்த பொண்ணை இப்படி ஆக்கிட்டுப் போயிட்டானே!" என்று புலம்பினாள் மங்கையின் தாய்.

"நான் சம்மதிச்சதாலதானே அவர் போனாரு?" என்றாள் மங்கை.

"பொண்டாட்டிகிட்ட நைச்சியமாப் பேசி அவளை சம்மதிக்க வைக்கறது ஒரு ஆம்பளைக்குக் கஷ்டமான காரியமா என்ன? உங்கிட்ட சொல்லி சம்மதம் வாங்கிக்கிட்டு வெளியூரு போனவன் அங்கே மதுவைக் குடிச்சுக்கிட்டு, வகையாத் தின்னுக்கிட்டு, இன்னும் எதையெல்லாமோ பண்ணிக்கிட்டு கும்மாளம் போட்டுக்கிட்டிருப்பான். நீ மட்டும் பசலை நோயால வாடிக்கிட்டிருக்க!" 

"இந்தப் பிரிவுக்கு என்னை சம்மதிக்க வச்சுட்டு, அவர் மட்டும் இந்தப் பிரிவால பாதிக்கப்படாம மகிழ்ச்சியா இருப்பார்னா, இந்தப் பசலை நோயை நான் மகிழ்ச்சியா ஏத்துக்கறேன்!" என்றாள் மங்கை.

"என்ன பொண்ணோ!" என்று அலுத்துக் கொண்ட மங்கையின் தாய், 'இவ வயசில நானும் இப்படித்தானே இருந்தேன், நான் கஷ்டப்பட்டா பரவாயில்ல, என் புருஷன் நல்லா இருக்கணும்னு நினைச்சு!' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1189
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

பொருள்:
இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர் நலமாக இருப்பார் என்றால், என் மேனி பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...