Thursday, May 11, 2023

1188. உடம்புக்கு என்ன?

நாகம்மை தெருவில் நடந்து சென்றபோது, அவளுக்கு அறிமுகமானவர்கள் பலர் அவளை உற்றுப் பார்த்தனர்.

ஒரு இளம்பெண் அவள் அருகில் வந்து, "என்னடி ஒரு வாரம் முன்னால உன்னைப் பார்த்தேன். அதுக்குள்ள இப்படி இளைச்சுட்ட. உடம்பெல்லாம் வெளிறிப் போயிருக்கு. உடம்பு சரியில்லையா என்ன?" என்றாள்.

நாகம்மை 'ஒன்றுமில்லை' என்பது போல் தலையாட்டினாள். அதற்குள் அருகில் நடந்து கொண்டிருந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, "உனக்குத் தெரியாதா? அவளுக்குப் பசலை பிடிச்சிருக்கு!" என்றாள்.

"பசலையா? அப்படின்னா?"

"உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போலருக்கு! காதலன் இருக்கானா? அப்பவும் உனக்கு இந்த அனுபவம் வரும்!" என்று அந்தப் பெண்மணி கூறியதைக் கேட்டு அந்த இளம்பெண் ஒன்றும் புரியாமல் நின்றாள்.

நாகம்மை விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நடந்தாள்.

வீட்டுக்குச் சென்ற நாகம்மை, தன் அம்மாவிடம், "என்னம்மா இது, வீட்டை விட்டு வெளியிலே போனாலே எல்லாரும், 'என்னடி இப்படி இளைச்சுட்டே'ங்கறாங்க, என் பசலை நோயைப் பத்திப் பேசறாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா!" என்றாள் வருத்தமும், கோபமும் கலந்த குரலில்.

"நீ ஏதோ தப்பு பண்ணிட்ட மாதிரி உன்னைத்தான் எல்லாரும் குத்தம் சொல்லுவாங்க. கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்திலேயே உன்னை விட்டுட்டு வியாபாரம் பண்ணப் போறேன்னு வெளியூருக்குப் போயிட்டானே உன் புருஷன், அவனைப் பத்தி யாரும் பேச மாட்டாங்க!" என்றாள் நாகம்மையின் தாய் அவளைப் பரிவுடன் அணைத்தபடி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1188
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

பொருள்:
இவள் உடலில் பசலை படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பதுதான் என்று சொல்பவர் இல்லையே.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...