Tuesday, May 9, 2023

1186. ஒளி அகன்றதும்...

"ஒருநாள்தானே ஊருக்குப் போயிட்டு வந்தேன்? அதுக்குள்ள இப்படி முகம் சிறுத்து, தோல் வெளுத்து, சோகை பிடிச்சவ மாதிரி ஆயிட்ட!" என்றான் மலையரசன்.

"அதான் திரும்பி வந்துட்டீங்களே, இனிமே சரியாயிடுவேன்!" என்றாள் பரிவாதினி, சிரித்தபடி.

ரவில் படுக்கையறையில் இருந்தபோது, "இனிமே நீங்க என்னைப் பிரிஞ்சு எங்கேயும் போகக் கூடாது!" என்றாள் பரிவாதினி.

"சரி, போகல!" என்ற மலையரசன், "ஒருநாள் பிரிவுக்கா இப்படி வாடிப் போவ, சோகை பிடிச்ச மாதிரி!" என்றான், சிரித்தபடி.

"அதுக்குப் பேர் சோகை இல்லை. அதைப் பசலைன்னு சொல்லுவாங்க. காதலனையோ, கணவனையோ பிரிஞ்சா, பெண்களுக்கு வர நோய் அது. நீங்க ஆம்பளை. உங்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகுது?" என்றாள் பரிவாதினி.

"ஒரு நாள் பிரிவுக்கெல்லாம் கூடவா இப்படியெல்லாம் ஆகும்?"

"ஒரு நாள் என்னங்க, ஒரு கணம் பிரிஞ்சாலே வரும்! இப்ப நீங்க என்னை அணைச்சுக்கிட்டுப் படுத்துக்கிட்டிருக்கீங்க இல்ல? உங்க அணைப்பு கொஞ்சம் விலகினா கூட, என் உடம்பில மாறுதல் ஏற்பட்டு, பசலை நோய் அறிகுறிகள் உருவாகறதை என்னால உணர முடியும்!"

"அது எப்படி? எதுக்குமே கொஞ்சம் நேரம் ஆகணும் இல்ல? உடனே எப்படி..? என்னால இதை நம்ப முடியல!"

"இப்ப இந்த விளக்கு எரியுது இல்ல? அதனால இங்கே இருள் இல்ல. இந்த விளக்கை அணைச்சா, உடனே இருள் பரவும் இல்ல? அதுக்கு நேரம் பிடிக்குமா என்ன? அது மாதிரிதான்!" என்ற பரிவதினி, வாயால் ஊதி விளக்கை அணைத்தாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1186
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

பொருள்:
விளக்கின் ஒளி குறையும் சமயம் பார்த்துப் பரவிடும் இருளைப் போல், இறுகத் தழுவிய காதலன் பிடி சற்றுத் தளரும்போது, காதலியின் உடலில் பசலை நிறம் படர்ந்து விடுகிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...