Tuesday, May 9, 2023

1185. விடைபெற்றுச் சென்றதும்....

கனகத்துக்கு இரவு முழுவதும் உறக்கம் பிடிக்கவில்லை. பொழுது விடிந்ததும் தன் கணவன் சபாபதி தன்னைப் பிரிந்து வெளியூர் சென்று விடுவான். அவன் திரும்பி வரும் வரை அவனைப் பிரிந்து எப்படி இருக்கப் போகிறோம் என்ற நினைவினால் அவள் தூக்கம் தொலைந்தது.

கணவன் கிளம்பிச் சென்றதும் தன் பிரிவுத் துயரை ஓரளவுக்காவது குறைக்க தன் தோழி ரத்னமாலாவை வரச் சொல்லி இருந்தாள் கனகம். அவளும் கனகத்துடன் இரண்டு நாட்கள் தங்கி இருக்க ஒப்புக் கொண்டாள்.

சபாபதி கிளம்ப வேண்டிய நேரத்துக்குச் சிறிது நேரம் முன்பே வந்து விட்டாள் ரத்னமாலா.

கனகத்திடம் விடைபெற்றுக் கொண்டு சபாபதி கிளம்பினான். விடைபெறும்போது சபாபதி கனகத்திடம் நெருக்கமாக இருந்து அவளைத் தழுவி அணைத்து விடைபெறக் கூடும் என்பதால் சபாபதி கிளம்பும் நேரத்தில் ரத்னமாலா வாசலுக்கு வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்தாள்.

சபாபதிக்கு விடைகொடுத்து விட்டுக் கனகம் வீட்டுக்குள் வந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன.

கனகத்தின் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்ட ரத்னமாலா அவள் கையை உற்றுப் பார்த்து விட்டு, "ஏண்டி, உன் கணவர் தெருக்கோடி வரை போயிருப்பாரா?" என்றாள்.

"போயிருப்பாரு. ஏன் கேக்கற?" என்றாள் கனகம் புரியாமல்.

"இல்லை. இப்பதான் உன் கணவர் கிளம்பினாரு. தெருக்கோடிக்குக் கூடப போயிருக்க மாட்டாரு. அதுக்குள்ள உன் தோல் வெளிற ஆரம்பிச்சுட்டுதே, பசலை வந்த மாதிரி! உடம்பு கூடக் கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கு!" என்றாள் ரத்னமாலா.

தோழி தன்னைக் கேலி செய்கிறாளா, அல்லது உண்மையாகவே தனக்குப் பசலை வந்து விட்டதா என்று புரியாமல் ரத்னமாலாவின் கண்களைப் பார்த்தாள் கனகம்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1185
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

பொருள்:
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...