Saturday, May 6, 2023

1183. எடுத்துக் கொண்டதும், கொடுத்துச் சென்றதும்!

வீட்டுக்கு வந்த மணிமேகலையை வரவேற்ற அழகம்மை, "வா, வா! ஒரு மாசமா வீட்டிலேயே முடக்கிக் கிடந்தவ, இன்னிக்குத்தான் உன்னோட அங்காடிக்கு வரேன்னு சொல்லி இருக்கா" என்றாள்.

பிறகு உள்ளே திரும்பி, "லட்சுமி! மணிமேகல வந்திருக்கா பாரு!" என்றாள், தன் மகளுக்குக் கேட்கும்படி.

உள்ளிருந்து வந்த லட்சுமி, மணிமேகலையைப் பார்த்து, "வா, போகலாம்!" என்றாள்.

"ஏண்டி, இப்படியேவா போவ? முகத்தில எண்ணெய் வழியுது. கையில, முகத்தில எல்லாம் அங்கங்கே தோல் நிறம் மாறி இருக்கு. முகத்தைக் கழுவிக்கிட்டு, நல்ல புடவை கட்டிக்கிட்டு, தோல் நிறம் மாறி இருக்கிற இடங்கள்ள கொஞ்சம் எண்ணெயைத் தடவி கொஞ்சாமாவது நிற மாற்றங்களைச் சரி செஞ்சுக்கிட்டுப் போ!" என்றாள் அழகம்மை.

அழகம்மை பேசி முடிப்பதற்குள், லட்சுமி தெருவில் இறங்கி விட்டாள். வேறு வழியில்லாமல், மணிமேகலையும் அழகம்மையைப் பார்த்து விடைபெறுவது போல் தலையாட்டி விட்டு, லட்சுமியைப் பின்தொடர்ந்தாள்.

தெருவில் சிறிது தூரம் நடந்ததும், "ஏண்டி, உங்கம்மா சொல்றது சரிதானே! நீ எவ்வளவு அழகா இருப்பே! இப்ப உன் முகத்தைப் பார்க்கவே சகிக்கல. பசலை படர்ந்து, தோல் வேற அங்கங்க நிறம் மாறி இருக்கு. தெருவில நடந்து போறவங்க கூட உன்னை ஒரு மாதிரியாதான் பாக்கறாங்க. உன் அம்மா சொன்னபடி கொஞ்சம் ஒப்பனை செஞ்சுக்கிட்டு வந்திருக்கலாம் இல்ல?" என்றாள் மணிமேகலை.

"என்னவோ தெரியல. அவர் என்னை விட்டுப் பிரிஞ்சு வெளியூர் போனப்பறம், நான் வெளியிலேயிலேயும் சரி, உள்ளுக்குள்ளேயும் சரி, அடியோட மாறிட்ட மாதிரி இருக்கு. என்னை விட்டுப் பிரிஞ்சு போனப்ப, அவர் என்னோட அழகையும், வெட்கத்தையும் எடுத்துக்கிட்டு, பதிலுக்கு இந்தக் காதல் நோயையும், பசலை நோயையும் கொடுத்துட்டுப் போயிட்டாரோ என்னவோ!" என்றாள் லட்சுமி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 119
பசப்புறுபருவரல் (தோலின் நிறம் மாறி வருந்துதல்)

குறள் 1183
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

பொருள்:
காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு, அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...