Friday, December 9, 2022

1166. கடலினும் பெரிது!

"என்னடி, கல்யாணத்துக்கப்புறம் ஒரு மாசமா உன்னைக் கண்ணிலேயே காணுமே! ஊருக்கு எங்கேயாவது போயிருந்தியா என்ன?" என்றாள் வானதி.

"இல்லையே! இங்கேதான் இருந்தேன். அவரோட அப்பப்ப எங்கேயாவது போயிட்டு வருவேன். அதைத் தவிர, வெளியில அதிகமா வரல. அதனால, நீ என்னைப் பாத்திருக்க மாட்ட!" என்றாள் குமுதினி.

"ம்...கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?"

"உனக்குத் தெரியாதா? நீ எனக்கு முன்னேயே கல்யாணம் ஆனவதானே?"

"ஒவ்வொருத்தரோட அனுபவமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கல்யாணம் ஆன புதுசில, 'கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கு?'ன்னு என்னை யாராவது கேட்டிருந்தா, 'காத்தில மிதக்கற மாதிரி இருக்கு'ன்னு சொல்லி இருப்பேன். நீ என்ன சொல்லுவ?"

"எனக்கு உன்னை மாதிரியெல்லாம் பேசத் தெரியாதுடி. ஆனா, நீ காத்துல மிதக்கற மாதிரி இருக்குன்னு சொன்னதைக் கேட்டப்பறம், எனக்கு வேற ஒண்ணு தோணுது!" என்றாள் குமுதினி.

"என்ன தோணுது?" என்றாள் வானதி.

"நான் கடலைப் பாத்ததில்ல. அது பெரிசா, எல்லை இல்லாதததா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். என் திருமண வாழ்க்கையில, என்னோட சந்தோஷமும் கடல் மாதிரி, கரையில்லாத மாதிரி, பரந்ததா இருக்கறதா எனக்குத் தோணுது!" என்றாள் குமுதினி.

"ன்ன குமுதினி, உன் புருஷன் எப்ப ஊர்லேந்து வராரு?" என்றாள் வானதி.

"மூணு மாசத்தில வந்துடுவேன்னு சொன்னாரு. அவர் போய் ரெண்டு மாசம்தான் ஆச்சு. ஆனா, எனக்குப் பல வருஷங்கள் ஆயிட்ட மாதிரி இருக்கு. இன்னும் ஒரு மாசம்  எப்படி காத்துக்கிட்டிருக்கப் போறேன்னு நினைச்சா மலைப்பா இருக்கு!" என்றாள் குமுதினி.

"கவலைப்படாதே! கணவன் மனைவியை விட்டுப் பிரிஞ்சு வெளியூர் போறது உலகத்தில எல்லா வீட்டிலேயும் நடக்கற விஷயம்தான். பிரிவுத் துன்பத்தைப் பொறுத்துக்கறது கஷ்டம்தான். ஆனா, பொறுத்துக்கிட்டுத்தான் ஆகணும்!"

"கடலை விடப் பெரிசா ஏதாவது இருக்கா?" என்றாள் குமுதினி, திடீரென்று.

"ஏன் கேக்கற?" என்றாள் வானதி, புரியாமல்.

"என் காதல் வாழ்க்கை எப்படி இருக்குன்னு அன்னிக்கு நீ கேட்டப்ப, கடல் மாதிரி பரந்ததா இருக்குன்னு சொன்னேன். இந்தப் பிரிவுத் துன்பம் அந்தக் கடலை விடப் பெரிசா இருக்கே, அதுதான் கேட்டேன்!" என்றாள் குமுதினி.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1166
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

பொருள்:
காதல் இன்பம் கடல் போன்றது. காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலை விடப் பெரியது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

Thursday, December 8, 2022

1165. துயர் தரும் காதலன்!

"என்ன சுந்தரி, உன் காதலர் ஊர்லேந்து வந்துட்டார் போல இருக்கே!" என்றாள் ரதிதேவி.

"ஆமாம், அக்கா! நாலு மாசம் கழிச்சு வந்திருக்காரு!" என்றாள் சுந்தரி.

"உன் முகத்தைப் பாத்தாலே தெரியுதே! இத்தனை நாளா உன் முகத்தில சுரத்தே இல்லை. இன்னிக்குத்தான் முகத்தில ஒரு மலர்ச்சி தெரியுது."

'உனக்குக் கேலியா இருக்கு! இந்த நாலு மாசமா எப்படித் தவிச்சேன்னு எனக்குத்தானே தெரியும்!' என்று நினைத்துக் கொண்டாள் சுந்தரி.

"என்னடி, மறுபடி உன் முகம் வாடி இருக்கு? உன் காதலன்தான் திரும்பி வந்துட்டாரே! ஒரு மாசமா சந்தோஷமா இருந்தியேன்னு பாத்தேன். மறுபடி எங்கேயாவது ஊருக்குப் போகப் போறாரா என்ன?" என்றாள் ரதிதேவி.

"இல்லை, அக்கா! அவர் இங்கதான் இருக்காரு."

"அப்புறம் என்ன?"

"அவர் என் மேல கோபமா இருக்காரு. ரெண்டு நாளா என்னைப் பாக்கறதும் இல்ல, பேசறதும் இல்ல!"

"எதுக்குக் கோபம்?"

"ஏதோ சின்ன விஷயம். அவர் செஞ்சது தப்புன்னு நான் சொல்லிட்டேன். அதுக்குப் போய்ப் பெரிசாக் கோவிச்சுக்கிட்டு, என்னைப் பாக்காம, எங்கிட்ட பேசாம என்னை தண்டிக்கறாரு!" என்றாள் சுந்தரி. சொல்லும்போதே அவளுக்கு அழுகை பீறிட்டு வந்தது.

"அடி போடி! இதுக்கா இப்படி வாடிப் போயிட்ட? காதலர்களுக்குள்ள இது மாதிரி சண்டை வரது சகஜம்தான். சண்டை போட்டுப்பாங்க, கொஞ்ச நாள் கழிச்சு சமாதானம் ஆயிடுவாங்க. இதுக்காகக் கவலைப்படாதே!" என்றாள் ரதிதேவி.

"இல்லை, அக்கா! அவர் எங்கிட்ட அன்பா இருக்கறப்பவே எனக்குப் பிரிவைக் கொடுத்து கஷ்டப்படுத்தினாரு. இப்ப என் மேல கோபமா இருக்கறப்ப எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துவாரோன்னு நினைச்சாலே எனக்கு பயமா இருக்கு!" என்றாள் சுந்தரி.

காதலனின் பிரிவு சுந்தரியை எந்த அளவுக்கு பாதித்திருந்தது என்பதை உணர்ந்து கொண்ட ரதிதேவி, தோழியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யோசிக்கத் தொடங்கினாள்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1165
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

பொருள்:
நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?

அறத்துப்பால்                                                               பொருட்பால்

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...