Sunday, November 27, 2022

1161. நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார்!

 "என்ன தேன்மொழி, ஏன் கொஞ்சநாளா ஒரு மாதிரி இருக்கே?" என்றாள் பரிவாதினி.

"உனக்குத் தெரியுமே! நீயே இப்படிக் கேக்கற!" என்றாள் தேன்மொழி.

"உன் காதலைப் பத்தி எனக்குத் தெரியுங்கறது உண்மைதான். ஆனா நீ சோர்வா இருக்கறதுக்குக் காரணம் எனக்குத் தெரியாதே!"

"என்னைப் பாத்தா சோர்வா இருக்கற மாதிரியா இருக்கு?"

"அப்படி இருக்கறதாலதான் கேக்கறேன்!"

"நீயும் ஒத்தரைக் காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டவதானே? உனக்குத் தெரியாதா காதல் நோயைப் பத்தி? காதலரைப் பாக்க முடியலேன்னா அதனால ஏற்படற ஏக்கம், மனத்துன்பம் பத்தியெல்லாம் உனக்குத் தெரியாதா?"

"எனக்குத் தெரியும். ஆனா மத்தவங்க எங்கிட்ட கேக்கறப்ப எனக்கு என்ன பதில் சொலறதுன்னு தெரியல. அதான் உங்கிட்ட கேட்டேன்!" என்றாள் பரிவாதினி.

"மத்தவங்க உங்கிட்ட கேட்டாங்களா? அது எப்படி? நான்தான் என் காதல் நோயை யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருக்கேனே! அது எப்படி மத்தவங்களுக்குத் தெரிஞ்சது?"

"போடி முட்டாள்! மறைச்சு வச்சுருக்கறதா நீ தினைச்சுக்கிட்டிருக்க! மறைச்சு வச்சா நோய் இன்னும் அதிகமாகி இன்னும் அதிகமா வெளியில தெரியும். நெருப்பை மடியில வச்சுக் கட்டிக்கிட்டா அது அணையுமா என்ன? இன்னும் பெரிசா எரிஞ்சு உடையிலேயும் பத்திக்கிட்டு உன்னை அதிகமா வாட்டறதோட, மத்தவங்களுக்கும் வெளிக்காட்டிடும் இல்ல? காதல் நோயை மறைச்சாலும் அப்படித்தான் நடக்கும். நான் அனுபவிச்சிருக்கேனே!" என்றாள் பரிவாதினி பெருமூச்சுடன்.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117
படர் மெலிந்திரங்கல் (பிரிவுத் துயரால் உடல் மெலிதல்)

குறள் 1161
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

பொருள்:
என் காதல் நோயைப் பிறர் அறியக் கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல் மறைக்க மறைக்க என் நோயும் பெருகவே செய்கிறது.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...