Saturday, November 26, 2022

1160. தூது வந்த தோழி!

"உனக்கு ஊர்மிளாவைத் தெரியுமா?"

"'எந்த ஊர்மிளா?"

"அதாண்டி லட்சுமணரோட மனைவி. எந்த லட்சுமணர்னு கேட்டுடாதே! ராமரோட தம்பி லட்சுமணரோட மனைவி. எந்த ராமர்..."

"எந்த ராமர்னு கேக்க மாட்டேன். நானும் கொஞ்சம் ராமாயணம் படிச்சிருக்கேன். சொல்லு!"

"ராமரோட தானும் காட்டுக்குப் போறேன்னு லட்சுமணர்னு சொன்னப்ப, ஊர்மிளா மறுப்பே சொல்லாம அவரை வழியனுப்பி வச்சா. பதினாலு வருஷம் கணவனோட பிரிவைத் தாங்கிக்கிட்டுப் பொறுமையா இருந்தா!"

"ராமாயணக் கதை உண்மையில நடந்ததா?"

"என்னடி நாத்திகவாதி மாதிரி பேசற? சரி. ராமாயணம் கதையாவே இருக்கட்டும். சந்திரவதியை உனக்குத் தெரியும் இல்ல?"

"எந்த சந்திர...ஓ, அவங்களா? தெரியுமே! நம்ம ஊர்லேயே ரொம்ப வசதியான குடும்பம் அவங்களோடதுதானே?"

"இப்ப சொன்னியே, நம்ம ஊரிலேயே வசதியான குடும்பம் அவங்களோடதுன்னு, அந்த வசதி எப்படி வந்தது தெரியுமா? அவங்க கல்யாணம் ஆகி இந்த ஊருக்கு வந்தப்ப அவங்க கணவர் ஒரு கூலித் தொழிலாளியாத்தான் இருந்தாரு. வேலை கிடைச்சாதான் கூலி, கூலி கிடைச்சாதான் சோறுங்கற நிலைமை. கல்யாணத்துக்கப்பறம் தன் மனைவியை சந்தோஷமா வச்சுக்கணும்னா அதுக்குப் பணம் வேணும்னு புரிஞ்சுக்கிட்டு அவரு ஒரு கப்பல்ல வேலைக்குப் போனாரு. அப்பதான் கல்யாணம் ஆகி இருந்தாலும், சந்தரவதி தன் குடும்ப நிலையைப் புரிஞ்சுக்கிட்டு கணவனுக்கு விடை கொடுத்தாங்க. அவர் திரும்பி வரவரைக்கும் பொறுமையாக் காத்துக்கிட்டிருந்தாங்க. ஆறு மாசம் கழிச்சு அவங்க புருஷன் கைநிறையப் பணத்தோட வந்தாரு. அந்தப் பணத்தை வச்சு சின்னதா வியாபாரம் ஆரம்பிச்சு அது பெரிசாகி வளர்ந்து, அதனாலதான் இன்னிக்கு அவங்க நம்ம ஊரிலேயே பணக்காரங்களா இருக்காங்க."

"............"

"என்னடி மௌனமா இருக்க? சந்திரவதியைப் பத்தி நான் சொன்னதும் கட்டுக்கதைன்னு சொல்லப் போறியா?"

"இல்ல. உண்மையாத்தான் இருக்கும். சந்திரவதி மாதிரி கணவன் தன்னை விட்டுப் பிரியச் சம்மதிச்சு அவர் திரும்ப வர வரைக்கும் பொறுமையாக் காத்திருந்த வேற சில பெண்களும் இருக்கலாம். ஆனா..."

"என்னடி ஆனா, ஆவன்னா?"

"ஆனா, என்னால என் கணவரைப் பிரிஞ்சு இருக்க முடியாது. நீ சொன்ன ராமாயண உதாரணத்திலேயே, சீதை தன் கணவனை விட்டுப் பிரிய மாட்டேன்னு அவரோட காட்டுக்குப் போனாங்களே! அதனால, உன்னை தூது அனுப்பின என் புருஷன்கிட்ட அவர் என்னைப் பிரிஞ்சு போறதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிடு!" 

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

பொருள்:
காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கிறார்கள்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...