Thursday, October 13, 2022

1152. விடிந்தால் பயணம்!

"விடியக் காலையில கிளம்பணும்" என்றான் கந்தன்.

"அதை எத்தனை தடவை சொல்லுவீங்க?" என்றாள் மணிமேகலை.

"நீ மறந்துட்டியோன்னு நினைச்சேன்!"

"ஏன், நீங்க ஊருக்குப் போகறீங்கங்கறதைக் கொஞ்ச நேரம் மறந்து நான் சந்தோஷமா இருக்கக் கூடாதா?"

"உன் பேச்சே எனக்குப் புரியல. நாம காதலிச்சபோதெல்லாம் நீ எங்கிட்ட எவ்வளவு அன்பாப் பேசுவ! இப்ப ஏன் இப்படிக் கடுமையாப் பேசறே?"

"சரி. இனிமையாவே பேசறேன். அன்புள்ள கணவரே! நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. நீங்க திரும்பி வர வரையிலேயும் உங்களைப் பிரிஞ்சு நான் சந்தோஷமா இருக்கேன்! இது போதுமா?" என்றபோதே மணிமேகலை தன்  கண்ணில் பெருகிய நீரை மறைக்கச் சட்டென்று கண்களை மூடிக் கொண்டாள்.

மூடிய கண்ளிலிருந்து சிறிது நீர் அவள் கன்னங்கள் வழியே இறங்கியது.

மணிமேகலையின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்ட கந்தன், "எனக்கு மட்டும் பிரிவுத் துயர் இருக்காதா? நீ இப்படி கண்ணீர் விடறதை நினைச்சா போற இடத்தில என்னால எப்படி நிம்மதியா இருக்க முடியும்?" என்றான்.

கணவனின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட மணிமேகலை, "விடுங்க. நீங்க இப்படி அணைச்சுக்கறப்பல்லாம், இன்னும் சில மாதங்களுக்கு இந்த அணைப்பு கிடைக்காதேன்னு நினைச்சு அழுகைதான் வருது. காதலிச்சப்பல்லாம் உங்களைக் கண்ணால பார்த்தே சந்தோஷப்பட்டுக் கிட்டிருந்தேன். இப்ப கல்யாணத்துக்கப்பறம் நாம நெருக்கமானப்பறம் அந்த  நெருக்கம் கொஞ்ச நாளைக்குக் கிடைக்காதுன்னு நினைச்சாலே அழுகை வருது!" என்றாள்.

சட்டென்று அவன் மார்பில் தலையைச் சாய்த்து விம்ம ஆரம்பித்தாள் மணிமேகலை.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 116
பிரிவாற்றாமை

குறள் 1152
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

பொருள்:
முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போது கூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...