செல்வி கண்களை மூடிக் கொண்டாள்.
"ஆனா, ஒரு முக்கியமான வியாபார விஷயமா நான் போய்த்தான் ஆகணும். இது ஒரு பெரிய வாய்ப்பு. இந்த வியாபாரத்தை முடிச்சுட்டா, நான் பெரிய செல்வந்தன் ஆயிடுவேன். அப்புறம் வாழ்நாள் முழுக்க நமக்குப் பணக் கஷ்டமே இருக்காது" என்றான் மாறன் தொடர்ந்து.
"ஒரு வருஷம்தான். ஓடறதே தெரியாது. கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள காலம் ஓடிடும். உன்னைப் பார்க்க நான் திரும்பி வந்துடுவேன்!"
செல்வி இப்போதும் பதில் சொல்லவில்லை. மூடிய கண்களை இன்னும் திறக்கவும் இல்லை.
"ஏமாந்தியா? நான் பொய் சொன்னேன்!" என்று கைகொட்டிச் சிரித்தான் மாறன்.
செல்வி சட்டென்று கண்ணைத் திறந்தாள். "என்ன சொல்ற?" என்றாள்.
"ஒரு வருஷம்னு சொன்னது பொய். ஆறு மாசத்தில வந்துடுவேன். முதல்ல உன்னை ஏமாத்தறதுக்காக ஒரு வருஷம்னு சொன்னேன்!" என்றான் மாறன்.
ஒரு வருடம் என்று சோன்னதைக் கேட்டு செல்வி முதலில் மனம் கலங்கினாலும், பிறகு ஆறு மாதம் என்று சொன்னதும், நல்ல வேளை, ஒரு வருடம் இல்லை, ஆறு மாதம்தானே?' என்ற் ஆறுதல் அடைந்து விடுவாள் என்று தான் போட்ட கணக்கு பலிக்கிறதா என்பதை அறியும் ஆவலில் செல்வி என்ன சொல்லப் போகிறாள் என்று எதிர்பார்த்து நின்றான் மாறன்.
"ஒரு வருஷம்னு சொன்னியா?" என்றாள் செல்வி வியப்புடன்.
"என்ன செல்வி, நான் பேசினதை நீ கேட்கவே இல்லையா?" என்றான் மாறன் ஏமாற்றத்துடன்.
"என்னைப் பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாதுன்னு நீ சொன்னதைக் கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனா, நீ 'ஆனா...'ன்னு அரம்பிச்சதுமே. என்னைப் பிரியப் போறேன்னு சொல்லப் போறேன்னு நினைச்சு நான் கண்ணை மூடிக்கிட்டேன்!" என்றாள் செல்வி.
"கண்ணை மூடிக்கிட்டா, நான் பேசினது கேட்காம போயிடுமா என்ன?"
"காதில விழுந்திருக்கும். ஆனா மனசில பதியல. ஏன்னா கண்ணை மூடிக்கிட்டு, 'உன்னைப் பாக்காம ஒருநாள் கூட என்னால இருக்க முடியாது' ன்னு நீ சொன்ன வாக்கியத்தையே மனசில திரும்பத் திரும்ப நினைச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன். நீ பேசின வேற எதுவும் என் மனசில பதியல!"
"சரி இப்ப சொல்றேன். ஆறு மாசத்தில திரும்ப வந்துடுவேன்! இது ரொம்ப குறுகிய காலம்தானே?"
"இதையெல்லாம் நீ ஏன் என்கிட்ட சொல்ற?" என்றாள் செல்வி.
"உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்றது?"
"உனக்கு வேற காதலி யாராவது இருக்காங்களா?"
"என்ன செல்வி இது? ஏன் இப்படிக் கேக்கற?" என்றான் மாறன் கோபத்துடன்.
"உனக்கு வேற காதலி யாராவது இருந்து, உன்னைப் பிரிஞ்சு அவ உயிரோட இருப்பான்னா அவகிட்ட சொல்லு, சீக்கிரம் வந்துடுவேன்னு. எங்கிட்ட சொல்லி என்ன பயன்?"
கண்ணீரை அடக்க முடியாமல் அங்கிருந்து ஓடினாள் செல்வி.
கற்பியல்
பொருள்:
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம் சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே அவர்களிடம் சொல்.
No comments:
Post a Comment