"அப்படி என்ன பேசுகிறார்கள்?" என்றான் இளமாறன்.
"காதலர்களைப் பற்றி ஊரார் பேசுவது இயல்புதான். ஆனால், நாம் இருவரும் களவு மணம் செய்து கொண்டு விட்டதாகச் சிலர் பேசுவதுதான் எனக்குச் சங்கடத்தை ஏற்படுத்தகிறது!"
"அவர்கள் பேசுவதை உண்மையாக்கி விடலாமா?" என்றான் இளமாறன், குறும்பாக.
"பேச்சைப் பார்! நம் இருவரின் பெற்றோரின் சம்மதத்துடன் நம் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்தானே உங்களுடன் பழக ஆரம்பித்தேன்?" என்றாள் காந்தா, சற்றே கோபத்துடன்.
"கவலைப்படாதே! விரைவிலேயே என் பெற்றோருடன் வந்து உன் பெற்றோரைப் பார்த்துப் பேசி, நம் திருமணத்துக்குச் சம்மதம் வாங்குகிறேன்!" என்றான் இளமாறன்.
"இளமாறனைப் பற்றி ஒரு செய்தி" என்றாள் சுவர்ணமுகி, தயக்கத்துடன்.
"சொல்!" என்றாள், சில நாட்களாக இளமாறன் தன்னைச் சந்திக்கவில்லையே என்ற பதட்டத்துடன் இருந்த காந்தா.
"மனதைத் தேற்றிக் கொள். அவர் இந்த ஊரை விட்டே போய்விட்டாராம்."
"திரும்பி வரலாம் இல்லையா?" என்றாள் காந்தா, நம்பிக்கை இழக்காமல்.
"அவர் ஊரை விட்டுப் போனதே வேறொரு ஊரில் உள்ள ஒரு செல்வந்தரின் மகளைத் திருமணம் செய்து கொண்டு, அந்த ஊரிலேயே வாழும் நோக்கத்துடன்தான்!"
காந்தாவுக்கு ஒரு நிமிடம் பேச்சு வரவில்லை. தொண்டையில் ஏதோ அடைப்பது போல் இருந்தது.
"இப்படி ஒருவன் செய்வானா என்று ஊரில் பலரும் அவரை ஏசுகிறார்கள் என்றாள் சுவர்ணமுகி, தோழிக்கு ஆறுதலாக இருக்குமே என்ற நோக்கத்தில்.
"இப்படி ஏமாற்றுவார் என்று எதிர்பார்க்கவில்லை!" என்றாள் காந்தா, கம்மிய குரலில்.
"நீ சில நாட் களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது நல்லது" என்றாள் சுவர்ணமுகி, தயக்கத்துடன்.
"ஏன்?" என்றாள் காந்தா, கோபமாகக் கேட்பது போல். இப்போது அவள் குரலில் ஒரு தெளிவும், உறுதியும் இருந்தன.
"இல்லை, இப்போது ஊராருக்கு உன் மேல் பரிதாபம் இருக்கிறது. ஆனால், சில நாட்களில் அது மறைந்து விடும். அதற்குப் பிறகு, நீ இளமாறனுடன் பழகியதைக் குறை கூறிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். அதையெல்லாம் கேட்க உனக்குச் சங்கடமாக இருக்கும்."
காந்தா பெரிதாகச் சிரித்தாள்.
"என்னடி சிரிக்கிறாய்?" என்றாள் சுவர்ணமுகி, கவலையுடன். ஒருவேளை தன் தோழிக்கு அதிர்ச்சியில் சித்தம் கலங்கி இருக்குமோ என்ற ஐயம் அவளுக்கு ஏற்பட்டது.
"முன்பு ஊரார் எங்களைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று நான் கவலைப்பட்டபோது, எனக்கு உறுதியளித்து ஆறுதல் கூறியவர், இப்போது என்னைக் கைவிட்டு விட்டு இன்னொருத்தியைக் கைப்பிடிக்கப் போய்விட்டார். இப்போது ஊரார் பேசுவது பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?" என்றாள் காந்தா, ஆத்திரம் பொங்கிய குரலில்.
தோழியின் உணர்ச்சிகள் ஒரு நிலைக்கு வரச் சற்று காலம் பிடிக்கும் என்று சுவர்ணமுகிக்குத் தோன்றியது.
களவியல்
பொருள்:
அஞ்ச வேண்டாம் என்று அன்று உறுதி கூறியவர், இன்று பலரும் நாணும்படியாக என்னை விட்டுப் பிரிந்த பின், அதைப் பற்றிய அலருக்கு (பிறர் பேசும் பேச்சுக்களுக்கு) நான் ஏன் நாண வேண்டும்?
Read 'Where Love Has Gone' the English version of this story by the same author.

No comments:
Post a Comment