Thursday, June 30, 2022

1144. சிவகாமி செய்த உதவி!

"அப்புறம்?" என்றாள் மணிமேகலை.

"அப்புறம் என்ன? உட்புறம், வெளிப்புறம்னு எல்லாம் பேசிட்டமே?" என்றான் சந்திரன்.

"அப்படின்னா நாம பேசறதுக்கு எதுவுமே இல்லையா? இப்பவே இப்படின்னா கல்யாணம் ஆனப்பறம் எப்படி?"

"அப்ப சண்டை போட நிறைய விஷயம் இருக்கும். சண்டை. சமாதானம்னு வாழ்க்கை சுவாரசியமாப் போகும்?"

"அப்படின்னா, நம் காதல்ல சுவாரசியம் இல்லைங்கறியா?" என்றாள் மணிமேகலை சற்றே கோபத்துடன்.

"அடக் கடவுளே! காதலிக்கறப்ப சண்டை வராம ஜாக்கிரதையா இருப்போம். ஏன்னா சண்டை வந்தா காதல் முறிஞ்சுடுமோங்கற பயம்!  கல்யாணம் ஆனப்பறம் அந்த பயம் இருக்காது இல்ல, அதைச் சொன்னேன்!" என்றான் சந்திரன் சமாதானமாக.

"நம்ம காதல்ல சுவாரசியம் இல்லேங்கறது உண்மைதான். பொதுவா காதலுக்குக் கொஞ்சமாவது எதிர்ப்பு இருக்கும். ஆனா நம் விஷயத்தில அது இல்ல. உனக்குப் பெற்றோர்கள் இல்ல. எங்க அப்பா அம்மாகிட்ட என் காதலைப் பத்தி இன்னும் சொல்லனேன்னாலும், அவங்க என் விருப்பத்தை ஏத்துப்பாங்க. ஏன்னா அவங்களே காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிடவங்கதான். அதனால நம் காதல் ஒரு பிரச்னையும் இல்லாம ஓடிக்கிட்டிருக்கு. ஏதாவது பிரச்னை வந்தாதானே ஒரு சுவாரசியம் இருக்கும்?"  

தற்குப் பிறகு நான்கைந்து நாட்கள் அவர்கள் சந்திக்கவில்லை. அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்துக்கு தினமும் சந்திரன் வந்து காத்திருந்து விட்டு ஏமாந்து திரும்பிப் போனான்.

ஆறாவது நாள் மணிமேகலை வந்தபோது அவள் முகம் சோர்ந்திருந்தது.

"என்ன ஆச்சு மணிமேகலை? உடல்நிலை சரியல்லையா?" என்றான் சந்திரன்.

"ஏன்யா, ஊரில நடக்கறது எதுவுமே உனக்குத் தெரியாதா?" என்றாள் மணிமேகலை கோபத்துடன்.

"என்ன நடக்குது ஊர்ல?"

"உன்னையும், என்னையும் பத்தி சில பேர் கண்டபடி பேசிக்கறாங்களே, அது உன் காதில விழலியா?"

"என்ன பேசிக்கிறாங்க?"

"நீயும், நானும் பொது இடத்தில கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுத்துக்கிட்டமாம்!"

"அடிப்பாவி! உன்னை நான் தொட்டது கூட இல்லையே! யாரு இப்படியெல்லாம் சொன்னது?"

"நம் ஊர்ல சிவகாமி அத்தைன்னு இருக்காங்க. வம்பு பேசறதுதான் அவங்க முழு நேர வேலை. அன்னிக்கு நாம பேசிக்கறதைப் பாத்துட்டாங்க போலிருக்கு. சும்மா பக்கத்துல உக்காந்து பேசிக்கிட்டதை கண்ணும் காதும் வச்சு, கட்டிப் பிடிச்சுக்கிட்டோம், முத்தம் கொடுத்துக்கிட்டோம்னெல்லாம் நிறைய பேர்கிட்ட சொல்லி இருக்காங்க."

"அப்புறம்?"

"எங்க அப்பா அம்மா காதுக்கும் விஷயம் போச்சு. அவங்க என்னைக் கேட்டங்க. நான் உண்மையைச் சொன்னேன். அந்த சந்திரனை சீக்கிரமே வந்து பெண் கேக்கச் சொல்லுன்னு சொன்னாங்க. ஆனா எனக்குத்தான் வெளியில வந்தாலே, என்னைப் பாக்கற ஊர்க்காரங்க என்ன நினைச்சுப்பங்களோன்னு பயமா இருக்கு!"

"அப்பா! நம் காதல்ல சுவாரசியம் இல்லையேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருந்தோம் இல்ல, அந்தக் கவலையை அந்த சிவகாமி அத்தை தீர்த்து வச்சுட்டாங்க. அவங்களைப் போய்ப் பார்த்து நன்றி சொல்லிட்டு வரலாம்!" என்று சொல்லிச் சிரித்தான் சந்திரன்.

ஒரு கணம் அவனை முறைத்துப் பார்த்த மணிமேகலை, பிறகு தானும் அவன் சிரிப்பில் கலந்து கொண்டாள். 

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 115
அலரறிவுறுத்தல்  (காதலைப் பற்றி ஊரார் பேசுதல்)

குறள் 1144
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

பொருள்:
ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போயிருக்கும்.

அறத்துப்பால்                                                               பொருட்பால்

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...