Tuesday, January 19, 2021

1126. கண் மூடும் வேளையிலும்


"உன்னை எப்பவும் என் இதயத்துக்குள்ளேயே வச்சிருக்கேன்" என்றான் ராம்.

"இது மாதிரியெல்லாம் பேசறது ஆம்பளைங்களுக்கு வழக்கம். இதையெல்லாம் நான் நம்ப மாட்டேன்" என்றாள் அஞ்சனா.

"உன்னை நம்ப வைக்கறதுக்கு நான் என்ன செய்யணும்? ராமருக்கு அனுமார் தன் மார்பைப் பிளந்து காட்டினாராமே, அப்படிக் காட்ட முடியுமா?"

"முடியாதுதான். ஏன்னா, நான் ராமர் இல்ல, நீதான் ராம். அதோட, நான் அஞ்சனா. அஞ்சனாவோட பிள்ளைதான் ஆஞ்சநேயர். அதனால, இங்க ரோல் மாறி இருக்கு!"

"அப்ப, உன் இதயத்தில என்னை வச்சிருக்கறதா சொல்றியா?"

"இதயத்தில வைக்கறது பெரிய விஷயம் இல்ல. இதயத்தில எத்தனையோ விஷயங்களை வச்சிருக்கேன். அதுல நீயும் ஒண்ணு. உன் இதயத்தில நான் இருக்கறதும் அப்படித்தான்!"

"அடிப் போடி! இப்படியெல்லாம் ஏதாவது ரொமான்ட்டிக்கா சொல்றதுதான் காதல்ல கிக்கான விஷயம். என் இதயத்தில உன்னை வச்சிருக்கேன்னு நான் சொன்னா, பதிலுக்கு, நீயும் என்னை உன் இதயத்தில வச்சிருக்கறதாச் சொன்னா, எனக்கு சந்தோஷமா இருக்கும். அதை விட்டுட்டு, என்னென்னவோ விளக்கமெல்லாம் சொல்லிக்கிட்டிருக்கே!"

"டேய் முட்டாள்! உன்னை நான் என் கண்ணுக்குள்ள வச்சிருக்கேண்டா!"

"நான் உன்னை இதயத்தில வச்சிருக்கேன்னு சொன்னேன். ஏட்டிக்குப் போட்டியா, நீ என்னைக் கண்ல வச்சிருக்கறதா சொல்ற. ரெண்டும் ஒரே மாதிரிதானே!"

"ஏட்டிக்குப் போட்டியா சொல்லல. இதயம் ஒரு குப்பைக் கூடை. அதில கண்டதெல்லாம் கிடக்கும். கண் அப்படி இல்ல. அது ரொம்ப சென்சிடிவ். கண்ணுக்குள்ள எல்லாத்தையும் வைக்க முடியாது. உன்னை என் கண்ணுக்குள்ள வச்சிருக்கேன்னா, நீ என் கண்ணுக்கு எதிரில இல்லாட்டாலும், உன் உருவம் என் கண்ல இருந்துக்கிட்டே இருக்கும்னு அர்த்தம்."

"ஓ, அப்படியா! கேக்க ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு. ஆனா, ஜாக்கிரதை. நீ கண்ணை இமைக்கறப்ப, கண்ணை மூடித் திறக்கறப்பல்லாம் என்னை அழுத்திக் கசக்குவியே! அப்ப எனக்கு வலிக்காதா?"

"வலிக்காது. ஒரு சின்னத் தூசி கண்ல இருந்தாக் கூட, கண்ணை உறுத்திக்கிட்டே இருக்கும், இல்ல? ஆனா, நீ எப்பவுமே என் கண்ணுக்குள் இருந்தாலும், எனக்கு ஒரு சின்ன உறுத்தல் கூட இல்லையே! அப்படின்னா, நீ தூசியை விட நுட்பமா, காத்து மாதிரிதான் என் கண்ல இருக்கேன்னுதானே அர்த்தம்? அப்புறம் எப்படி உனக்கு வலிக்கும்?" என்றாள் அஞ்சனா.

"முதல்ல, நான் உன் நாக்கில இருந்து, உன்னை மாதிரி புத்திசாலித்தனமாப் பேசக் கத்துக்கணும்!" என்றான் ராம்.

காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 113
காதற்சிறப்புரைத்தல்   

குறள் 1126
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்.

பொருள்:
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும், அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

Read 'One Who Dwells in My Eye' the English version of this story by the same author.

அறத்துப்பால்                                                                                                   பொருட்பால்



2 comments:

  1. Good one: have handled a sensitive subject well, with out going out of the way. As usual good job done.

    ReplyDelete

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...