Thursday, February 15, 2024

1292. அழைப்பு இல்லை!

"ஏண்டி, நம்ம காலேஜ்ல எத்தனையோ ஆண்கள் உன்னோட கடைக்கண் பார்வை தன் மேல படாதான்னு தவம் கிடக்கறாங்க. ஆனா, நீ அவங்களையெல்லாம் விட்டுட்டு, அந்த பிரகாஷ் பின்னால அலையறியே!" என்றாள் மஞ்சுளா.

"எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு!" என்றாள் ரூபா, சுருக்கமாக.

'ஆனா அவனுக்கு உன்னைப் பிடிச்ச மாதிரி தெரியலையே!' என்று சொல்ல நினைத்த மஞ்சுளா, தன் தோழியின் மனம் புண்படுமோ என்று நினைத்து, மௌனமாக இருந்தாள்.

"நேத்திக்கு சாயந்திரம் எங்கே போயிருந்தே? ஃபோன் பண்ணினேன். எடுக்கவே இல்லையே!" என்றாள் ரூபா.

"ஒரு பர்த்டே பார்ட்டிக்குப் போயிருந்தேன்!" என்றாள் மஞ்சுளா.

"யாரோட பர்த்டே பார்ட்டி?"

மஞ்சுளா சற்றுத் தயங்கி விட்டு, "சாரிடி. பிரகாஷோட பர்த்டே பார்ட்டிதான். நம்ம கிளாஸ்ல சில பேரைத்தான் அவன் கூப்பிட்டிருந்தான் போல இருக்கு. உன்னை அவன் கூப்பிட்டானா, இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஒருவேளை கூப்பிடலேன்னா, நீ வருத்தப்படுவியேன்னுதான் பார்ட்டிக்குப் போறதைப் பத்தி உங்கிட்ட சொல்லல" என்றாள் மஞ்சுளா.

ரூபாவின் முகத்தில் ஒரு கணம் அதிர்ச்சி தெரிந்தது. பிறகு சமாளித்துக் கொண்டவளாக, "அதனால என்ன? எனக்குத் தனியா பார்ட்டி கொடுக்கலாம்னு நினைச்சிருப்பான்!" என்றாள். 

மஞ்சுளா தோழியை வியப்புடன் பார்த்து விட்டுப் பேசாமல் இருந்தாள்.

ன்று இரவு படுக்கச் செல்லும்போது , 'என்னை ஏன் கூப்பிடலேன்னு பிரகாஷ்கிட்ட சண்டை போடத்தான் போறேன். எனக்குத் தனியா பார்ட்டி கொடுக்கணும்னு கேக்கப் போறேன். எப்படி மாட்டேன்னு சொல்றான்னு பாக்கறேன்!' என்று நினைத்துக் கொண்டாள் ரூபா.

"ஏண்டி, முட்டாள்! அவன் உன்னை மதிக்கலேன்னு தெரிஞ்சப்புறம், அவன்கிட்ட பழகி, அவனோட அன்பைப் பெறலாம்னு நினைக்கறியே! இது பைத்தியக்காரத்தனம் இல்லை?"

திடுக்கிட்டுக் கண் விழித்தாள் ரூபா. யார் இப்படிக் கேட்டது? 

கண்களைக் கசக்கிக் கொண்டு, முழு விழிப்பு நிலையை அடைந்த பிறகுதான், தான் தூங்கிக் கொண்டிருந்தபோது, தன் நெஞ்சிடம் தான் கேட்ட கேள்விதான் அது என்பது அவளுக்குப் புரிந்தது.

காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 130
நெஞ்சொடு புலத்தல் (நெஞ்சிடம் கோபம் கொள்ளுதல்)

குறள் 1292
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

பொருள்:
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே!

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...