Sunday, December 3, 2023

1285. குற்றப் பத்திரிகை!

கிருத்திகா மேஜை மீது ஒரு தாளை வைத்து மும்முரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தபோது, பின்னால் யாரோ நின்று கொண்டு பார்ப்பதாக உணர்ந்து ஒரு கையால் தான் எழுதியதை மூடிக் கொண்டு திரும்பிப் பார்த்தாள்.

பின்னால் நின்று கொண்டிருந்த அவள் தோழி கனகா சிரித்துக் கொண்டே, "நீ எழுதிக்கிட்டிருந்த காதல் கடிதத்தைப் பார்த்துட்டேன்" என்றாள்.

"இது காதல் கடிதம் இல்லை. அதனால நீ பார்த்ததா சொன்னது பொய்! எங்கே பாத்திருப்பியோன்னு நினைச்சேன், நல்லவேளை நீ பாக்கல."

"சரிடி. நான் பொய்தான் சொன்னேன். நீதான் நான் பாக்கறதுக்குள்ள மூடிட்டியே! சரி, சொல்லு. என்ன அது?"

"அது ஒரு லிஸ்ட்!" என்றாள் கிருத்திகா.

"லிஸ்டா? என்ன லிஸ்ட்? மளிகை சாமான் லிஸ்டா? அப்படி இருந்தா அதை மறைச்சிருக்க மாட்டியே!"

"சுதாகர்கிட்ட எனக்கு நிறையக் குற்றம் குறைகள் இருக்கு. இன்னிக்கு சாயந்திரம் அவரைச் சந்திக்கறப்ப இதையெல்லாம் அவர்கிட்ட சொல்லப் போறேன். ஞாபகமா எல்லாத்தையும் சொல்லணுங்கறதுக்காகத்தான் எல்லாத்தையும் எழுதி வைக்கறேன்."

"ஓ, குற்றப் பத்திரிகையா? என்னென்ன குற்றம்? ஒண்ணு ரெண்டு சொல்லேன்!"

"அதெல்லாம் நான் அவர்கிட்ட எதிர்பார்த்து அவர் செய்யாத விஷயங்கள். அதையெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது" என்றாள் கிருத்திகா.

மாலையில் சுதாகரைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசி விட்டு வீட்டுக்குத் திரும்பும்போதுதான், காலையில் தான் எழுதி வைத்திருந்த பட்டியலிலிருந்து ஒரு குறையைக் கூட அவனிடம் சொல்லவில்லை என்பது கிருத்திகாவுக்கு நினைவு வந்தது.

காமத்துப்பால்
கற்பியல்றை
அதிகாரம் 129
புணர்ச்சி விதும்பல் (ஒன்று சேர விரும்பதல்)
குறள் 1285
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

பொருள்:
மை தீட்டும் நேரத்தில் தீட்டு்கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...