Friday, August 14, 2020

1118. என்னைக் கொஞ்சம் காதலி!

"என்னருமைக் காதலிக்கு, வெண்ணிலாவே!
நீ இளையவளா மூத்தவளா, வெண்ணிலாவே?"

"நல்லாவே பாடறே!"

மொட்டை மாடியில் படுத்துக் கொண்டு, கண்களை மூடியபடி, தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்த விக்ரம், திடுக்கிட்டுக் கண்விழித்து, குரல் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தான். 

மொட்டை மாடியில் வேறு யாரும் இல்லை. அத்துடன், குரல் எங்கோ மேலிருந்து வருவது போல் இருந்தது.

மேலே வானம்தானே இருக்கிறது! 

"நான்தானப்பா! என்னைப் பத்தித்தானே பாடிக்கிட்டிருந்த?"

யார் பேசுவது? நிலவா? அது எப்படி முடியும்?

வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த நிலவின் ஓரத்தை ஒரு மேகத் துகள் தொட்டுச் சென்ற நிகழ்வு, நிலவு அவனைப் பார்த்துக் கண்ணடிப்பது போல் இருந்தது.

"பாவம்! காதலி ஊருக்குப் போயிட்டா போல இருக்கு!"

இப்போது சந்தேகமே இல்லை. குரல் நிலவிலிருந்துதான் வருகிறது! 'இது எப்படி நடக்க முடியும்?' என்ற சிந்தனை மனதின் ஒரு ஓரத்தில் எழுந்ததைப் புறக்கணித்து விட்டு, "அது எப்படி உனக்குத் தெரியும்?" என்றான் விக்ரமன், நிலவைப் பார்த்து.

"அதுதான் நேத்து ராத்திரி விடைபெறும் படலம் நடந்ததே! திறந்த வெளியில இப்படியா நடந்துப்பீங்க! நானே சில காட்சிகளைப் பாக்க முடியாம, மேகத்தில போய் ஒளிஞ்சுக்க வேண்டி இருந்தது!" என்றது நிலவு.

விக்ரம் சங்கடத்துடன் நெளிந்தான். யாருமே இல்லை என்று நினைத்துத்தானே கொஞ்சம் தாராளமாக நடந்து கொண்டோம்!

"காதலி ஊருக்குப் போயிட்டதால, இப்ப தனிமையில வாடறீங்களோ?" என்றது நிலவு.

ஆமாம் என்பது போல், விக்ரம் அனிச்சையாகத் தலையை ஆட்டினான். அப்புறம்தான், தான் தலையாட்டியதை, அவ்வளவு தூரத்திலிருந்து நிலவால் பார்க்க முடியுமா என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது.

"உன் காதலி திரும்பி வர வரையிலும் என்னைக் காதலியேன்!" என்றது நிலவு.

விக்ரமன் பெரிதாகச் சிரித்து விட்டு, "அது மட்டும் முடியாது!" என்றான்.

"ஏன், நான் அழகா இல்லையா என்ன?" என்றது நிலவு.

"உன் அழகுக்கென்ன? வட்டமான முகம்! ஆனா..."

"ஆனா என்ன?"

"நேத்து என் காதலியைப் பாத்தியே, அவ முகத்தில எவ்வளவு ஒளி இருந்ததுன்னு பாத்திருப்பியே! அதில பாதி ஒளி கூட உன் முகத்தில இல்லையே!" என்றான் விக்ரம்.

கோபத்தினாலும், அவமானத்தினாலும், நிலவு சட்டென்று ஒரு பெரிய மேகத்துக்குள் தன் முகத்தை மறைத்துக் கொண்டது.

யாரோ தன்னை உலுக்குவதை உணர்ந்து, திடுக்கிட்டுக் கண் விழித்தான் விக்ரம்.

"ஏண்டா, மொட்டை மாடியில படுத்துத் தூங்காதேன்னு எவ்வளவு தடவை சொல்லி இருக்கேன்? சளி பிடிக்கும். எழுந்து உள்ள வா!" என்றாள் அவனை உலுக்கி எழுப்பிய அவன் அம்மா.

விக்ரம் சற்றுக் குழப்பத்துடன் வானத்தைப் பார்த்தான். மேகத்திலிருந்து தயக்கத்துடன் வெளியே வந்து கொண்டிருந்த நிலா, மங்கலான ஒளியை அவன் மீது வீசியது.
காமத்துப்பால்
களவியல் 

அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1118
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.

பொருள்:
நிலவே! என் காதலியின் முகத்தைப் போல் உன்னால் ஒளி விட முடியுமென்றால், நீயும் என் காதலுக்கு உரியவள் ஆவாய்.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...