Monday, August 3, 2020

1116. விண்மீன்களின் குழப்பம்!

"மொட்டை மாடியில் உக்காந்து பேசறது தனி சுகம்தான்."

"ஆமாம். ஆனா, இன்னிக்கு நிலா இருக்கே! நிலா இல்லாம இருட்டா இருந்தா, இன்னும் நல்லா இருந்திருக்கும்!"

"என்ன உளறரே? காதலர்கள் நிலா வெளிச்சத்தை விரும்பறதுதானே இயல்பு?"

"அது சரிதான். ஆனா, சில சமயம் வெளிச்சம் இடைஞ்சலா இருக்கே! இப்ப நான் உன்னைத் தொடணும்னா, அக்கம் பக்கத்து மாடிகள்ளேந்து யாராவது பாத்துடுவாங்களோன்னு பயந்துகிட்டே தொடணும். இருட்டா இருந்தா, கொஞ்சம் தைரியமாத் தொடலாமே!"

"ஐயே! மாடியிலேந்து பாக்கறப்ப, வானம், நிலா, நட்சத்திரங்கள் எல்லாம் எவ்வளவு அழாகா இருக்குன்னு பாக்கறதை விட்டுட்டு, அலையறதைப் பாரு!"

"சரிம்மா! வான இயல் ஆராய்ச்சியே பண்ணலாம். அதுக்குத்தானே மொட்டை மாடிக்கு வந்திருக்கோம்!"

"எனக்கு சின்ன வயசிலேந்தே வானத்தைப் பாக்கறதில ஆர்வம் உண்டு."

"எனக்குக் கூட! சின்ன வயசில நான் தெருவில நடக்கறப்பவே, மேலே பாத்துக்கிட்டுத்தான் நடப்பேன். என் நண்பர்கள் எல்லாம் 'டேய், தரையைப்பாத்து நடடா, பள்ளத்தில எங்கேயாவது விழுந்துடப் போறே!'ன்னு கிண்டல் பண்ணுவாங்க!"

"இப்ப, நீதான் என்னைக் கிண்டல் பண்ணிக்கிட்டிருக்க! இப்படியே பேசிக்கிட்டிருந்தேன்னா, நான் கீழே இறங்கிப் போயிடுவேன்."

"சாரி கண்ணே, கோவிச்சுக்காதே! இனிமே சீரியஸாவே பேசறேன். சொல்லு!"

"அங்கே ஒரு நட்சத்திரக் கூட்டம் தெரியுது பார்!"

"ஆமாம், ஏழு நட்சத்திரம். அதை சப்தரிஷி மண்டலம்னு சொல்லுவாங்க."

"கரெக்ட். பரவாயில்லையே! உனக்குக் கூட இதெல்லாம் தெரிஞ்சிருக்கே!"

"அதான் நான் அப்பவே சொன்னேனே, சின்ன வயசிலேயே நான் வானத்தைப் பாத்துக்கிட்டுத்தான் நடப்பேன்னு!"

"மறுபடி ஆரம்பிச்சுட்டியா? கொஞ்சம் நான் சொல்றதைக் கேளு! அந்த நட்சத்தரக் கூட்டத்தோட வால் பகுதி மாதிரி ஒண்ணு இருக்கில்ல?"

"ஆமாம்!"

"கொஞ்ச நேரம் கழிச்சுப் பாத்தா, அந்த வால் பகுதி இந்தப் பக்கமா திரும்பி இருக்கும்!"

"அப்படியா?"

"ஆமாம். நான் எத்தனையோ தடவை பாத்திருக்கேன்."

"ஆனா, நான் பாத்ததில்லையே! நான் பாக்கறப்ப அப்படி நடக்காதுன்னு நினைக்கிறேன்!" 

"அது எப்படி நடக்காம இருக்கும்? நீ ரொம்ப நேரம் பாத்திருக்க மாட்டே!"

"இல்லை. நான் எவ்வளவு நேரம் பாத்தாலும், அப்படி நடக்காது. ஆனா நீ பாத்தா, கண்டிப்பா நடக்கும்!"

"அது எப்படி?"

"இப்ப அந்த வால் பகுதி நிலாவுக்கு எதிர்ப்புறமா இருக்கு இல்ல?" 

"ஆமாம்."

"அப்படின்னா, அந்த நட்சத்திரக் கூட்டத்தோட முகம் நிலாவைப் பாத்துக்கிட்டு, அதை நோக்கிப் போற மாதிரி இருக்கு இல்லையா? ஏன் அப்படி?"

"ஏன்னா, அது இயற்கையா அப்படித்தான்!"

"எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு, காதலி! நட்சத்திரங்களுக்கு நிலாகிட்ட ஒரு ஈர்ப்பு இருக்கு. அதனாலதான், அந்த நட்சத்திரங்கள் நிலாவை நோக்கிப் போகத் தயாரா இருக்கு!"

"ஓஹோ!"

"இப்ப, அந்த நட்சத்திரங்கள் இன்னொரு நிலாவைப் பாத்தா எப்படி இருக்கும்?"

"வானத்தில ஒரு நிலாதானே!"

"வானத்தில ஒரு நிலாதான். ஆனா, இப்ப பூமியிலேந்து ஒரு நிலா தெரியுது, அதாவது என் காதலியோட முகம்! இப்ப, நட்சத்திரங்களுக்கு இது நிலாவா, அது நிலாவான்னு குழப்பம் வந்து, பூமியில தெரியற நிலாவைப் பாத்து, முகத்தை இந்தப் பக்கம் திருப்புது. அதனால, வாலும் திரும்புது! இது நீ இருக்கறப்பதான் நடக்கும். நான் இருக்கறப்ப எப்படி நடக்கும்?"

"டேய்! இது உனக்கே ரொம்ப ஓவராத் தெரியல?"

"ஓவரா? அங்க பாரு. ஒரு நட்சத்திரம் உன் முகத்தைப் பாத்துட்டு, உங்கிட்ட வரதுக்காகக் கீழே விழுந்துக்கிட்டிருக்கு பாரு!"

அவன் வானத்திலிருந்து விழுந்து கொண்டிருந்த ஒரு எரி நட்சத்திரத்தைக் காட்ட, அவள் பக்கத்திலிருந்த ஒரு சிறிய குச்சியை எடுத்து, அவன் கையில்  செல்லமாக அடித்தாள்.

காமத்துப்பால்
களவியல் 

அதிகாரம் 112
நலம் புனைந்துரைத்தல்   

குறள் 1116
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.

பொருள்:
வானத்தில் உள்ள விண்மீன்கள், நிலவுக்கும் இவள் முகத்துக்கும் வேறுபாடு தெரியாமல், தங்கள் நிலையில் இல்லாமல் குழம்பியபடி திரிகின்றன.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...