
ஏக்கம் தந்தே சென்றன கைகள்!''
"எவ்வளவு அருமையா எழுதி இருக்கார் கவிஞர்! கண்ணதாசன்னா கண்ணதாசன்தான்!' என்றான் லிங்கம்.
''சும்மா அளக்காதே! இதில என்ன புரிஞ்சுது உனக்கு?'' என்றாள் சுமதி.
''என்ன அப்படிச் சொல்ற? உன் கண்கள் என்னைத் தொடுது, ஆனா உன் கைகள் என்னைத் தொடலியேன்னு ஏக்கமா இருக்கு! இதான் அர்த்தம்!''
''பரவாயில்லையே! அர்த்தம் புரியாமலியே அளக்கறியோன்னு நினைச்சேன்'' என்றாள் சுமதி.
"அப்ப, என் ஏக்கத்தைப் போக்குவியா?'' என்றான் லிங்கம்.
''அது முடியாதுடா கண்ணா!'
''ஏன் கண்ணு?''
''அந்தப் பாட்டோட அடுத்த வரியிலியே அதுக்கு பதில் இருக்கு!''
''அப்படியா? அடுத்த வரியில என்ன வருது?'' என்று மனதுக்குள் பாட்டைச் சொல்லிப் பார்த்த லிங்கம், ''முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம். ஓ! அதான் காரணமா?'' என்றான்.
சுமதி ஆமோதிப்பது போல் தலையாட்டினாள்.
''ஏன் கஷ்டப்பட்டு முள் மேல நிக்கற? என்ன செய்யணும்னு அடுத்த வரியிலியே சொல்லியிருக்காரே கவிஞர்?''
அடுத்த வரி என்ன என்று சுமதி யோசிப்பதற்குள், ''முத்துச் சரமே வா எந்தன் பக்கம்!'' என்றபடியே அவள் கையைப் பிடிக்கப் போனான் லிங்கம்.
சட்டென்று பின் வாங்கிய சுமதி, ''இங்க பாரு. தொட முயற்சி பண்ணினா, நீ என்னை மறந்துட வேண்டியதுதான்'' என்றாள் கோபத்துடன்.
அவள் திடீர் கோபத்தால் அதிர்ச்சி அடைந்த லிங்கம், ''சும்மா கையைத் தொட வந்ததுக்கு இப்படி எகிறிக் குதிக்கிற! எனக்கும் ரோஷம் இருக்கு. இனிமே நான் உன்னைப் பாக்க வர மாட்டேன்'' என்று சொல்லி விட்டுக் கோபமாகக் கிளம்பினான்.
சுமதி அதிர்ச்சியுடன் நின்றாள்.
ஒரு வாரத்துக்குப் பிறகு ஒரு நாள் லிங்கம் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரில் சில பெண்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். எதிர்சாரியில் நடந்து வந்து கொண்டிருந்த லிங்கம் அவர்களை கவனிக்கவில்லை. அவர்களைக் கடந்து செல்லும்போதுதான் ஏதோ உள்ளுணர்வு தோன்றி சட்டென்று திரும்பிப் பார்த்தான்.
அவர்களில் சுமதியும் இருந்ததை அப்போதுதான் கவனித்தான். அவன் பார்த்த நேரத்தில் அவளும் அவனைக் கடைக் கண்ணால் ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். லிங்கத்தின் உடலில் சுரீரென்று ஒரு உணர்வு பரவியது.
''என்னைப் பாக்கவே மாட்டேன்ன. அப்புறம் எதுக்கு வந்திருக்க?'' என்றாள் சுமதி.
''நீதான் வரச் சொன்ன!''
''நான் வரச் சொன்னேனா? இது என்ன புதுக் கதை?''
''காலையில தெருவில போறப்ப, என்னைப் பாக்கல?''
''தெருவில நடந்து போறப்ப, எதுத்தாப்பில நடந்து வரவங்களைப் பாக்காம இருக்க முடியுமா?''
''அப்படியா பாத்த நீ? ஒரு நொடியே பாத்தாலும், கடைக்கண்ணால பாத்தாலும், ஆளை அப்படியே அடிச்சுத் தூக்கிட்டுப் போற பார்வை இல்ல அது! அதான் ஓடி வந்துட்டேன்! இன்னொரு விஷயமும் புரிஞ்சுது.''
''என்ன?''
''உன்னைத் தொட்டா ஒரு சிலிர்ப்பு வரும்னு நினைச்சுதான் அன்னிக்கு உன்னைத் தொட முயற்சி செஞ்சேன். ஆனா உன் பார்வைல கிடைக்கற சந்தோஷமே இவ்வளவு இருக்கே! தொடறதையெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் வச்சுக்கலாம்னு முடிவு செஞ்சுட்டேன்!''
''போய்யா!'' என்றாள் சுமதி.
''முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்'' என்று பாடினான் லிங்கம்.
"அடுத்த வரிக்குப் போயிடப் போற, ஜாக்கிரதை!'' என்றாள் சுமதி.
காமத்துப்பால்
களவியல்
அதிகாரம் 110
குறிப்பறிதல்
குறள் 1092
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்செம்பாகம் அன்று பெரிது.
பொருள்:
கண்களால் என்னை நோக்கிக் களவு கொள்ளும் அந்தச் சுருங்கிய பார்வை காமத்தில் பாதியை விடப் பெரியது.