Friday, November 23, 2018

1083. வீரனின் சங்கடம்

ஆற்றில் பலரும் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த விபரீதம் நிகழ்ந்தது.

ஆற்றின் மையப்பகுதி மிக ஆழம். அங்கே ஓர் இடத்தில் நீர் மட்டத்துக்குக் கீழே ஒரு சுழல் உண்டு. அதில் சிக்கிக் கொண்டால், ஆழத்தில் கொண்டு தள்ளி விடும். நீச்சல் தெரிந்தவர்கள் கூட அதிலிருந்து பிழைத்து வருவது கடினம். 

கடந்த காலங்களில் இரண்டு மூன்று பேர் அந்தச் சுழலில் சிக்கிக்கொண்டு இறந்திருக்கிறார்கள். சில மணி நேரம் கழித்துப் பல மைல்கள் தள்ளிப் பிணமாகக் கிடைத்திருக்கிறார்கள்.

அதனால் ஆற்றில் குளிப்பவர்கள் யாரும் மையப்பகுதிக்கு அருகில் போக மாட்டார்கள். யாராவது சிறுவர்கள் சற்று முன்னால் போனாலே, அவர்களை மற்றவர்கள் தடுத்து விடுவார்கள்.

ஆனால் அன்று கந்தன் என்ற சிறுவன் வேகமாக நீந்தி, ஆற்றின்  மையப்பகுதிக்குப் போய் விட்டான். சுற்றியிருந்தவர்கள், "அங்கே போகாதேடா!" என்று கத்தியது அவன் காதில் விழுந்ததா என்றே தெரியவில்லை.

அனைவரும் பயந்தபடியே கந்தன் சுழலில் சிக்கிக் கொண்டு விட்டான். அவன் தலை நீருக்குள் மறைந்து விட்டது.

எல்லோரும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு இளைஞன் வேகமாக நீந்திச் சுழல் அருகே போய் விட்டான்.

"வீராசாமி! போகாதேப்பா! நீயும் மாட்டிப்ப!" என்று சிலர் கூவினர்.

சில நொடிகளில் அவன் தலையும் மறந்து விட்டது.

ஆனால், அடுத்த நிமிடமே சற்றுத் தள்ளி வீராசாமியின் தலை  தெரிந்தது. அவன் கையில் கந்தனைப் பிடித்திருந்தான். எப்படியோ சுழலில் மூழ்கி கந்தனை இழுத்துக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு வந்து விட்டான் வீராசாமி.

வேறு சிலர் அங்கே சென்று இருவரையும் அழைத்து வந்தனர்.

"கந்தா! நீ பிழைச்சது பெரிய அதிசயம்டா. வீராசாமி உன்னை எமன்கிட்டேந்தே மீட்டுக்கிட்டு வந்துட்டான்!" என்றார் ஒருவர்.

"என்னப்பா வீராசாமி! உனக்குக் கொஞ்சம் கூட பயமில்லையா?" என்று சிலர் கேட்டபோது, வீராசாமி பதில் சொல்லாமல் சிரித்தான்.

கந்தனுடன், வீராசாமியும், இன்னும் சிலரும் கந்தன் வீட்டுக்குச் சென்றனர். கந்தனின் பெற்றோரிடம் வீராசாமி கந்தனைக் காப்பாற்றியதைப் பற்றி மற்றவர்கள் பெருமையாகச் சொன்னார்கள். 

கந்தனின் பெற்றோருடன், அவன் அக்கா கனகமும் அங்கே இருந்தாள்.

சற்று நேரத்தில் வீராசாமி அவர்களிடம் விடை பெற்றுத் திரும்பினான். "வீராசாமி,  நீ நம்ம குடும்பத்துக்கு ரொம்ப வேண்டியவனாப் போயிட்ட. அடிக்கடி வந்து போயிக்கிட்டிரு" என்றார் கந்தனின் தந்தை.

சில நாட்களுக்குப் பிறகு, வீராசாமியைத் தெருவில் சந்தித்த கந்தனின் தந்தை, "என்னப்பா! அப்புறம்  ஆளையே காணோம்? அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டுப் போன்னு சொன்னேனே!" என்றார்.

"வரேங்க" என்றான் வீராசாமி.

கந்தனின் தந்தை சென்றதும், வீராசாமியுடன் இருந்த அவன் நண்பன் முத்து "ஏண்டா, அவர் பையனைக் காப்பாத்தினேங்கறதுக்காக நன்றியோட உன்னைத் தன் வீட்டுக்கு வரச் சொல்றாரு. ஒரு தடவை போயிட்டு வந்துடேன். அவரு சந்தோஷப்படுவாரில்ல?" என்றான்.

"போகலாம். கொஞ்சம் பயமா இருக்கு"

"என்னடா பயம்? அதுவும் உனக்கா? எமனுக்குக் கூட பயப்படாத வீரன்னு உன்னைப் பத்தி ஊர்ல எல்லாரும் சொல்றாங்க!"

"அவங்க வீட்டுக்குப் போனா, கந்தனோட அக்கா கனகம் இருப்பா."

"இருந்தா என்ன? அவகிட்ட உனக்கென்ன பயம்?"

"அவகிட்ட பயம் இல்ல. அன்னிக்கு அவ என்னைப் பாத்தப்ப, அந்தப் பார்வை என் மனசுக்குள்ள புகுந்து குத்தற மாதிரி இருந்தது. மறுபடி அந்தப் பார்வையை சந்திக்கறதுக்கே பயமா இருக்கு" என்ற வீராசாமி, சற்றுத் தயக்கத்துடன், "ஆனா அவளைப்  பாக்கணும் போலவும் இருக்கு!" என்றான்.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1083
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையல் பேரமர்க் கட்டு.

பொருள்:
எமன் என்று ஒன்று இருப்பதை இதுவரை நான் அறியாமல் இருந்தேன். அது பெண் தன்மையுடன், போர் செய்யும் பெரிய கண்கள் உடையது என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.

Read 'What Scares the Valiant Veera?' the English version of this story by the same author.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1330. முதல் ஊடல்!

திருமணத்துக்குப் பின், மதனும் திவ்யாவும் ஒரு வீட்டின் மாடிப் பகுதியில் குடியேறினர். வீட்டின் கீழ்ப்பகுதியில், வீட்டு உரிமையாளரான நாகராஜனும்,...