Thursday, November 1, 2018

1081. மந்திரப் புன்னகை

கோவில் திருவிழாவில் இத்தனை கூட்டம் இருக்கும் என்று குமரன்  எதிர்பார்க்கவில்லை. 

அவன் ஊரிலிருந்து சில மைல்கள் தள்ளி இருந்த அந்தக் கோவிலின் வருடாந்தரத் திருவிழா மிகவும் புகழ் பெற்றது. சிறுவனாக இருந்தபோது பள்ளி நண்பர்களுடன் ஒருமுறை சென்று வந்த பிறகு அவன் அந்தத் திருவிழாவுக்குச் சென்றதில்லை.
.
குமரனுக்குத் திருவிழாவுக்குச் செல்வதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. அவன் அம்மாதான் "ஒரு தடவை பார்த்துட்டு வா. படிச்சு முடிச்சிட்டே. எப்படியும் வேலைக்கு வெளியூருக்குப் போயிடுவ. அப்புறம் சந்தர்ப்பம் வராது" என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தாள்.

திருமண வயதுடையவர்கள் அந்தக் கோவில் திருவிழாவுக்குச் சென்று வந்தால், அவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகி விடும் என்று அந்தப் பகுதி மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. மகனைத் திருவிழாவுக்கு அனுப்பியதற்கு அதுவும் ஒரு காரணம் என்பதைக் குமரனின் தாய் தன் மகனிடம் சொல்லவில்லை.

குமரன் கோவிலுக்கருகில் சென்றபோது மக்கள் கூட்டம் அலை அலையாக நகர்ந்து கொண்டிருந்தது. வெகு தொலைவில் கோவிலின் உற்சவர் சிலை ஒரு உயர்ந்த மேடையில் வைக்கப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.

கூட்டத்தின் பின்னே சென்று மேடையருகில் சென்று சாமியை தரிசிக்கப் பல மணி நேரம் ஆகும் என்று தோன்றியது. இங்கிருந்தே கன்னத்தில் போட்டுக்கொண்டு திரும்ப வேண்டியதுதான் என்று நினைத்த குமரன் மீண்டும் ஒருமுறை கூட்டத்தைப் பார்த்தான். ஆணும் பெண்ணுமாகப் பல தலைகள் ஆடிக்கொண்டு மெதுவே நகர்ந்து கொண்டிருந்தன.

சட்டென்று ஒரு தலை மட்டும் தனியே தெரிந்தது. தெரிந்தது தலை என்று சொல்ல முடியாது. அந்தத் தலைக்குரிய பெண் தன் காதில் போட்டுக்கொண்டிருந்த குழைதான் அவளைத் தனித்துக் காட்டியது.

எத்தனையோ பெண்கள் கழுத்தில் வளையம் போன்ற காதணி அணிந்திருப்பதைக் குமரன் பலமுறை பார்த்திருக்கிறான். அந்தக் கூட்டத்திலேயே கூட இன்னும் பல பெண்கள் குழை அணிந்திருக்கக் கூடும். ஆயினும் எதனாலோ அந்தப் பெண்ணின் குழைகள் தனியே தெரிந்தன.

அந்தப் பெண்ணின் வயது என்ன என்பதை தூரத்திலிருந்து கணிக்க முடியவில்லை.

ஒருவித ஆர்வத்தில் குமரன் சற்று வேகமாக நடந்து சிலரைக் கடந்து இன்னும் சற்று முன்னே சென்றான். இப்போது அந்தப் பெண்ணின் கூந்தல் தெரிந்தது. பின்னல் போடாமல் பின்பக்கம் தொங்க விடப்பட்டிருந்த அந்தக் கூந்தலின் அசைவில் கூட ஒரு அழகு இருப்பதாகத் தோன்றியது.

முகத்தைக் கூடப் பார்க்காத ஒரு பெண்ணிடம் தனக்கு என் இந்த ஆர்வம் என்று குமரன் யோசித்தபோது, தற்செயலாக  அந்தப் பெண் முகத்தைப் பக்கவாட்டில் திருப்பினாள். தோகை விரித்த மயில் ஒன்று சட்டென்று தன்  கழுத்தை ஒடித்துத் திருப்புவது போல் இருந்தது அவள் செய்கை.

இப்போது அவள் முகத்தின் ஒரு பகுதி தெரிந்தது. ஆனால் அந்தத் தோற்றம் எதனாலோ குமரனின் மனத்தை மயக்கியது.

எப்படியும் அவள் முகத்தைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் இன்னும் வேகமாக நடந்து பலரைத் தாண்டி அந்தப் பெண்ணின் அருகில் வந்து விட்டான் குமரன். அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இன்னும் வேகமாக நடந்து அவளைத் தாண்டி சற்று தூரம் சென்றான்.

சாலையோரம் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தடியில் நின்று திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவள் தலை முடியின் அசைவும், அவள் ஆடி ஆடி நடந்து வந்ததும் அவளை ஒரு மயில் போல் தோன்ற வைத்தன.

அவள் முகத்தைப் பார்த்ததும் ஒரு கணம் குமரன் அயர்ந்து விட்டான். இது என்ன இப்படி ஒரு தெய்வீகக் களை! கோவிலில் இருந்த தெய்வ உருவங்களில்  ஒன்று திருவிழாவைப் பார்ப்பதற்காக எழுந்து வந்து கூட்டத்தோடு நடந்து வருவதாகத் தோன்றியது. 

அவள் அருகில் நெருங்கியபோது, இந்தப் பெண் எனக்கு மனைவியாக அமைந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் அவன் மனதில் எழுந்தது.

இப்போது அவள் அவனுக்கு மிக அருகில் வந்து விட்டாள். அவனைக் கடந்து சென்றபோது அவன் சற்றும் எதிர்பாராமல், அவனை  நோக்கித் திரும்பி இனிமையாகப் புன்னகை செய்தாள்.

குமாரனுக்குத் தான் திருவிழாவுக்கு வந்ததற்குப் பலன் கிடைத்து விட்டதாகத் தோன்றியது.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 109
தகையணங்குறுத்தல் (தலைவியின் அழகு தலைவனை வருத்துதல்)

குறள் 1081
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

பொருள்:
இவள் தெய்வப்பெண்ணா, அழகிய மயிலா அல்லது கனமான குழையைக் காதில் அணிந்த மனிதப் பெண்ணா என்று என் மனம் மயங்குகிறது.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:

               அறத்துப்பால்                                                                     பொருட்பால்                            


No comments:

Post a Comment

1307. முதலில் தேவை முகவரி!

விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு விபரீதத்தில் முடியும் என்று அஜய் எதிர்பார்க்கவில்லை. அஜய் வழக்கம்போல் வீணாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும்போ...