
பெண் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள். கிராமங்களில் சில சம்பிரதாயங்கள் இன்னும் பின்பற்றப்பட்டு வருவதை ராமு உணர்ந்திருந்தான்.
ஆனால், பெண் பார்க்கும் படலம் எப்படி இருக்கும் என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஒருவேளை, பழைய திரைப்படங்களில் இருப்பது போல் இருக்குமோ?
பெண் வீட்டை அவர்கள் அடைந்தபோது, வீட்டில் ஏராளமானோர் இருந்தனர். பெண்ணின் உறவினர்கள் யார், ஊர்க்காரர்கள் யார் என்று தெரியவில்லை. பெண்ணின் பெற்றோர், பெண்ணின் தம்பி ஆகியோர் மட்டும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
பெண்ணின் பெயர் காமு என்பது மட்டும் அவனுக்குத் தெரியும். ராமு-காமு பெயர்ப் பொருத்தம் இருப்பதாக முதன் முதலில் பெண்ணின் பெயரைக் கேட்டபோது ராமுவுக்குத் தோன்றியது.
இரண்டுமே முழுப் பெயர்கள் இல்லை என்று தெரிந்தாலும், இருவருமே முழுப் பெயர் மூலம் குறிப்பிடப்படாமல், சுருக்கப் பெயர் மூலம் குறிப்பிடப்படுவது இன்னொரு ஒற்றுமை என்றும் நினைத்துக் கொண்டான். இதெல்லாம் அசட்டுத்தனம் என்ற எண்ணம் மனதின் இன்னொரு பகுதியில் எழுந்தது.
இரண்டுமே முழுப் பெயர்கள் இல்லை என்று தெரிந்தாலும், இருவருமே முழுப் பெயர் மூலம் குறிப்பிடப்படாமல், சுருக்கப் பெயர் மூலம் குறிப்பிடப்படுவது இன்னொரு ஒற்றுமை என்றும் நினைத்துக் கொண்டான். இதெல்லாம் அசட்டுத்தனம் என்ற எண்ணம் மனதின் இன்னொரு பகுதியில் எழுந்தது.
சில நிமிடங்கள் ஆரம்ப உரையாடலுக்குப் பிறகு, பெண்ணை அழைத்து வந்தனர். கையில் காப்பி டம்ளர்கள் நிறைந்த தட்டுடன் வந்த காமு, ராமுவுக்கும், அவன் பெற்றோர்களுக்கும் காப்பி தம்ளர்களைக் கொடுத்து விட்டுத் தன் அம்மா அருகில் போய் நின்று கொண்டாள். ராமுவின் அம்மா 'உக்காரும்மா' என்று சொன்ன பின், கீழே உட்கார்ந்து கொண்டாள்.
அதற்குப் பிறகு, ராமுவின் பெற்றோரும், காமுவின் பெற்றோரும் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இருவரும் தங்கள் குடும்பப் பின்னணி, உறவினர்கள் பற்றிய விவரங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொண்டனர்.
ராமுவுக்குச் சங்கடமாக இருந்தது. அவ்வப்போது காமுவின் முகத்தைப் பார்த்தான். தொடர்ந்து அவள் முகத்தைப் பார்க்க அவனுக்குத் தயக்கமாக இருந்தது.
இருவரின் பெற்றோர்களும் தங்கள் பேச்சுக்கிடையே அவ்வப்போது திரும்பி இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் காமு மட்டும் இவனைப் பார்க்காமல் குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ராமுவின் அம்மா காமுவைப் பார்த்து, "ஏம்மா, ஒரு பாட்டுப் பாடேன்!" என்றாள்.
தனக்குப் பாடத் தெரியாது என்று சொல்வது போல் பக்கவாட்டில் தலையாட்டினாள் காமு.
காமுவின் பெற்றோர் சற்றுக் கவலையுடன் ராமுவின் அம்மாவைப் பார்த்தனர், பாடத் தெரியவில்லை என்பதற்காகப் பெண்ணை நிராகரித்து விடுவார்களோ என்று கவலைப்படுவது போல்!
ராமு தொண்டையைச் செருமிக் கொண்டு, "நான் ஒரு பாட்டுப் பாடட்டுமா?' என்றான், காமுவின் தந்தையைப் பார்த்து.
அவர் தயக்கத்துடன் ராமுவின் அம்மாவைப் பார்க்க, ராமுவின் அம்மா அவனைப் பார்த்து முறைக்க, காமுவின் தோழிகள் சிலர், "பாடுங்க மாப்பிள்ளை சார்!" என்று சிரித்தபடியே அவனை உற்சாகப்படுத்தினர்.
ராமுவின் அம்மா அரை மனதுடன் தலையாட்ட, ராமு பாட ஆரம்பித்தான்:
"நேற்று வரை நீ யாரோ நான் யாரோ?
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ?"
அவன் பாடி முடிக்கும் வரை மௌனம் நிலவியது. அவன் பாடி முடித்ததும் பலத்த கரவொலி எழுந்தது.
காமுவின் தோழி ஒருத்தி "மாப்பிள்ளை பாட்டு மூலமா தன் முடிவையும் சொல்லிட்டார்!" என்றாள் உரக்க.
முதலிரவின்போது காமுவிடம் ராமு கேட்ட முதல் கேள்வி இதுதான்: "உன்னைப் பெண் பாக்க வந்தப்ப நான் பாடின பாட்டைப் பத்தி என்ன நினைச்சே?"
"ம்..எனக்குப் பாடத் தெரியாதுன்னு நான் சொன்னப்பறம் எல்லாருக்குமே கொஞ்சம் சங்கடமா இருந்திருக்கும். அந்த மூடை மாத்தறதுக்காகப் பாடினீங்கன்னு மொதல்ல தோணிச்சு..." என்றாள் காமு.
"அப்புறம் என்ன தோணிச்சு?"
"நீங்க ஜெமினி கணேசன் பாட்டைப் பாடினதும் நீங்க உங்களை ஒரு காதல் மன்னன்னு காட்டிக்க விரும்பறீங்களோன்னு தோணிச்சு..."
"அடிப்பாவி!" என்றான் ராமு.
"ஆனா பாட்டை முழுசாக் கேட்டப்பறம், வேற ஒண்ணு தோணிச்சு!"
"என்ன தோணிச்சு?"
"நீங்க என்னைப் பாத்தப்ப, நான் உங்களைப் பாக்காத மாதிரி தரையைப் பாத்துக்கிட்டிருந்தேன். ஆனா நீங்க என்னைப் பாக்காதப்ப, நான் திருட்டுத்தனமா உங்களைப் பாத்துக்கிட்டிருந்தேன். இதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் நீங்க அந்தப் பாட்டைப் பாடினீங்கன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்!" என்றாள் காமு.
"அந்தப் பாட்டில அப்படி இருக்கா என்ன?" என்றான் ராமு.
"வேணும்னே அந்தப் பாட்டைப் பாடிட்டு, இப்ப தெரியாத மாதிரி கேக்கறீங்க! என்னோட திருட்டுத்தனத்தை விடப் பெரிய திருட்டுத்தனமா இருக்கே உங்களோடது!" என்றாள் காமு.
"பாட்டில இருக்கற அந்த வரிகளை நீ பாடிக் காட்டினாத்தான் நீ சொல்றதை நான் ஒத்துப்பேன்."
"எனக்குத்தான் பாடத் தெரியாதுன்னு சொன்னேனே!"
"பரவாயில்ல. நீ என்ன பாட்டுப் போட்டியிலயா பாடப் போற? எனக்குத்தானே பாடிக் காட்டப்போற?" என்று ராமு சொல்லி முடிக்கும் முன்பே காமு பாட ஆரம்பித்து விட்டாள்.
"உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே!"
"அட இவ்வளவு அருமையாப் பாடற. ஆனா, அன்னிக்கு பாடத் தெரியாதுன்னுட்ட. இது மாதிரி இன்னும் எவ்வளவு திருட்டுத்தனம் வச்சிருக்க?" என்றான் ராமு.
"ம்? இன்னிக்குத்தானே நம்ப வாழ்க்கை ஆரம்பிச்சிருக்கு. போகப் போகப் புரிஞ்சுப்பீங்க!" என்றாள் காமு, சிரித்தபடி.
களவியல்
அதிகாரம் 110
குறிப்பறிதல்
குறள் 1094
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்தான்நோக்கி மெல்ல நகும்.
பொருள்:
நான் அவளைப் பார்க்கும்போது அவள் குனிந்து கீழே பார்த்துக் கொண்டிருப்பாள். நான் அவளைப் பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்து விட்டுத் தனக்குள் இலேசாகச் சிரித்துக் கொள்வாள்.
Read 'A Song for the Occasion' the English version of this story by the same author.
Your back to your younger days, Ranga. Nice story
ReplyDeletePl give me your name. Is it Chellappaa?
Delete