Wednesday, July 1, 2020

1110. லதாவின் கவலை!

லதா முதன் முதலாக சேகரின் வீட்டுக்கு வந்தபோது அவன் வீட்டில் பல இடங்களிலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்து விட்டு, "என்ன இப்படி வீடு முழுக்க புத்தகங்களைப் போட்டு வச்சிருக்கீங்க? பழைய பேப்பர் கடை மாதிரி இருக்கு!" என்றாள்.  

"என் அம்மா சொல்ற மாதிரியே சொல்றியே!" என்றான் சேகர். "என் வீடு சின்ன வீடுதான். அதில இத்தனை புத்தகங்களை ஒரே இடத்தில வைக்கற மாதிரி இடம்  இல்லை. அதனாலதான் நிறைய இடங்கள்ள வச்சிருக்கேன்" என்றான் தொடர்ந்து.

லதாவின் மனதில் மெலிதாக ஒரு கவலை எழுந்தது. 

"முதல்ல உங்க வீட்டுக்கு வந்தப்ப உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கணுங்கற என் முடிவு சரிதானான்னு எனக்கு ஒரு கவலை வந்தது" என்றாள் லதா, சேகரின் தலையைக் கோதியபடி.

"என், வீடு ரொம்ப சின்னதா இருக்கேன்னு பாத்தியா?"

"அதைப் பத்தி இல்ல. வீடு பூரா இருந்த புத்தகங்களைப் பாத்து!"

"ஏன் புத்தகங்கள் எல்லா இடங்களையும் ஆக்கிரமிச்சுக்கறதால உன்னோட பொருட்களை வைக்க இடம் இருக்காதுன்னு பயந்தியா?"

"இவ்வளவு புத்தகங்கள் படிச்சும் இப்படி மக்கா இருக்கீங்களே!" என்று செல்லமாக சேகரின் தலையில் குட்டினாள் லதா. " 'இவரு ஒரு புத்தகப் புழுவா இருப்பாரு போலருக்கே, இவருக்கு என்னை கவனிக்க நேரம் இருக்குமா?'ன்னு கவலைப் பட்டேன்."

"ஆனா, இப்ப?"

"இப்பவா?" என்று அவன் முகத்தைப் பார்த்துகே கையால் பிடித்தபடி சிரித்த லதா, " 'என்னைக் கொஞ்சறதைத் தவிர  இவருக்கு வேற வேலையே இல்லையா'ன்னு நான் நினைக்கிற அளவுக்கு என்னைத் திணற அடிக்கறீங்க!" என்றாள் சற்றே வெட்கத்துடன். 

"என்னைப் பொறுத்தவரையிலும் நீயும் ஒரு புத்தகம்தான். புத்தகங்களைப் படிச்சா அறிவு வளரும்னு சொல்லுவாங்க. ஆனா நான் ஒரு புத்தகத்தைப் படிச்சா நமக்குத் தெரியாத விஷயங்கள் இவ்வளவு இருக்கேன்னு பிரமிப்புதான் ஏற்படும். நீ சொன்னியே அது மாதிரி இதெல்லாம் தெரியாம இப்படி ஒரு மக்கா இருக்கேனேன்னு நினைச்சுப்பேன். இன்னும் நிறையப் படிக்கணும்னு ஆசை வரும். ஒவ்வொரு தடவை உன்னைப் படிக்கறப்பவும் ஒரு புதுப் புத்தகத்தைப் படிக்கிற மாதிரி பிரமிப்பாதான் இருக்கு. திரும்பத் திரும்பப் படிக்கணும் போல இருக்கு. இவகிட்ட இன்னும் எவ்வளவோ இருக்கும் போலருக்கேன்னு நினைக்க நினைக்க உன் மேல் காதல் அதிகமாகிக்கிட்டேதான் இருக்கு!" என்று சொல்லி அவளை இறுக அணைத்தான் சேகர். 


காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  

குறள் 1110
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

பொருள்
 செந்நிற அணிகலன்களை அணிந்திருக்கும் இவளோடு கூடும்போது ஏற்படும் காதல், நூல்களை படித்துப் பொருள் அறிய அறிய அறியாதவற்றை உணர்வது போல் உள்ளது.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

No comments:

Post a Comment

1310. ஏன் இப்படி?

"நான் ஒண்ணு சொல்லட்டுமா?" என்றாள் நளினி. "ம்" என்றாள் மாதங்கி, தோழி என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிந்தவளாக. "கிரீஷ...