Sunday, April 26, 2020

1101. காதலில் விழுந்தேன்!

வார இறுதி நாட்களில் கோபாலைப் பிடிக்கவே முடியாது. ஹோட்டல், சினிமா என்று எங்காவது போய்க் கொண்டிருப்பான். 

கோபால் நல்ல வேலையில் இருந்து கை நிறையச் சம்பாதித்து வந்ததால், அவன் பெற்றோர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நேரம் வரும்போது திருமணம் செய்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டார்கள். 

கோபால் பெரும்பாலும் வெளியில் சுற்றுவது அவன் நண்பன் செந்திலுடன்தான். ஆயினும் எல்லா வார இறுதி நாட்களிலும் கோபாலுடன் வெளியில் சுற்றுவது செந்திலுக்கு சற்று சிரமமாக இருந்தது. ஒரு புறம் பொருளாதார ரீதியாக செந்தில் அவ்வளவு வசதியானவன் இல்லை என்பதால் ஹோட்டல், சினிமா என்று ஒவ்வொரு வார இறுதியிலும் கணிசமான தொகையைச் செலவழிப்பது அவனுக்கு ஒரு சுமையாக இருந்தது என்றால், மறுபுறம் இந்தப் பழக்கத்தை அவன் பெற்றோர்கள் ஆதரிக்கவில்லை.

ஆயினும் கோபால் அவனை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு போய் விடுவான். சில சமயம் செந்தில் வீட்டுக்குச் சென்று அவன் பெற்றோர்களிடமே பேசி செந்திலை அழைத்துக்கொண்டு போய் விடுவான்.

"ஏண்டா இப்படி வெறி பிடிச்ச மாதிரி வாராவாரம் ஹோட்டல், சினிமான்னு சுத்தற" அதுவும் சனி, ஞாயிறு ரெண்டு நாள்ளேயும்! சனியோ, ஞாயிறோ ஒரு நாளைக்கு மட்டும் போனாலாவது பரவாயில்ல!" என்று செந்தில் அவனிடம் பல முறை சொல்லி விட்டான்.

"டேய்! வாழ்க்கையை அனுபவிக்கணும்டா! கடவுள் நமக்கு அஞ்சு புலன்களைக் கொடுத்திருக்கார். அந்த அஞ்சு புலன்களுக்கும் அனுபவ சுகத்தை நாம கொடுக்க வேண்டாமா? நல்ல தியேட்டருக்குப் போனா, படம் பாக்கறது கண்ணுக்கும், காதுக்கும் விருந்து, ஏசியோட இதமான குளிரும், சொகுசான சீட்டில இஷ்டப்படி சாஞ்சுக்கிட்டு உக்காந்துக்கறது உடம்புக்கு சுகம், ஏசி தியேட்டர்ல போடற பர்ஃப்யூமோட மணம் மூக்குக்கு சுகம், நல்ல ஹோட்டல்ல ருசியா சாப்பிடறது நாக்குக்கு சுகம். இதாண்டா வாழ்க்கையை அனுபவிச்சு வாழற வழி!" என்பான் கோபால்.

"சரியான ரசிகன்தாண்டா நீ?" என்பான் கோபால்.

 ரண்டு மூன்று வாரங்களாக செந்திலால் கோபாலைப்  பார்க்க முடியவில்லை. ஒரு வார இறுதியில் கோபால் தன் வீட்டுக்கு வருவான் என்று எதிர்பார்த்திருந்த செந்தில் அவன் வராததால் ஏமாற்றமடைந்தான்.

திங்கட்கிழமையன்று  செந்தில் கோபாலுக்கு ஃபோன் செய்து கேட்டபோது, ஏதோ முக்கியமான வேலை இருந்ததாகச் சொன்னான் கோபால்.

அடுத்த வார இறுதியிலும் கோபால் வரவில்லை. செந்தில் ஃ போன் செய்தபோது கோபால் ஃ போனை எடுக்கவில்லை. 

முன்றாவது வார இறுதியில் செந்தில் கோபால் வீட்டுக்குப் போய்ப் பார்த்தான்.

"அவன் காலையிலேயே கிளம்பிப் போயிட்டானே! உன்னோடதான் எங்கியோ போறான்னு நினைச்சேன்" என்றாள் கோபாலின் தாய்.

செந்தில் ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பினான்.

அன்று இரவு கோபால் செந்திலுக்கு ஃபோன் செய்தான். "வீட்டுக்கு வந்திருந்தியாமே? சாரிடா! உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நாளைக்குக் காலையில நானே உன் வீட்டுக்கு வரேன்" என்றான்.

றுநாள் செந்தில் வீட்டுக்கு வந்த கோபால் அவன் அறைக்குள் இருவரும் தனிமையில் இருந்தபோது, "ஒங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்டா! நான் ஒரு பெண்ணைக் காதலிக்கறேன்!" என்றான்.

"அடப்பாவி! எத்தனை நாளாடா?"

"ஒரு மாசமாத்தான்!"

"அதான் மூணு வாரமா வீக் எண்ட்ல என்னைக் கூப்பிடறதில்லையா? எனக்கு டிமிக்கி கொடுத்துட்டு அவளோட சுத்தறியாக்கும்! எங்கிட்ட சொல்லியிருக்கலாம்ல?  நான் உன்னை எதிர்பாத்து ஏமாறாம இருந்திருப்பேன்!" என்றான் செந்தில் குற்றம் சொல்வது போல்.

"சாரிடா! இதையெல்லாம் உடனே சொல்ல முடியுமா? முதல்ல நான்  அதை உறுதிப் படுத்திக்கணும் இல்ல?"

"அதான் மூணு வாரமா அவளோட சுத்தறியே, இன்னும் என்ன உறுதிப்  படுத்திக்கறது?" என்ற  செந்தில், "அவளோடயும் சினிமா, ஹோட்டல்னுதானே சுத்தற? மால்ல பர்ச்சேஸ் எல்லாம் கூட இருக்குமே!" என்றான்.

"அதெல்லாம் இல்ல. அவளுக்கு தியேட்டருக்குப் போறது, ஹோட்டலுக்குப் போறதிலேல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல. கோவில், பார்க், மியூசியம், ஜூ, பீச்  இது மாதிரி இடங்களுக்குப் போகத்தான் அவளுக்கு விருப்பம். அதனால இங்கெல்லாம்தான் போனோம். ஐயா சினிமா பாத்தே மூணு வாரம் ஆச்சு, தெரியுமா!" என்றான் கோபால் சிரிப்புடன்.

"ஐம்புலன்களாலேயும் இன்பங்களை அனுபவிக்கணும்னு சொல்லுவியே? அதெல்லாம் இப்ப போச்சா?" என்றான் செந்தில் கேலியாக.

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கோபால், "இல்லடா! ஐம்புலன்களுக்கான இன்பமும் அவ கிட்டயே இருக்குடா! அவள் முகத்தைப் பாக்கறதும் அவ பேச்சையும், அவள் வளையல் சத்தத்தையும் கேக்கறதும், அவ கையைப் பிடிச்சுக்கிட்டு நடக்கறதும், அவ தலையில இருக்கற பூவோட நறுமணத்தை அனுபவிக்கறதும், அப்புறம் எப்பவாவது..." என்று இழுத்தான் 

"புரியுது, புரியுது! முத்தக்காட்சியெல்லாம் சென்சார்ல கட்!" என்றான் செந்தில் சிரித்தபடி.

"எப்பவாவது ஒரே தின்பண்டத்தை ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடறதும்ன்னு சொல்ல வந்தேன்!" என்றான் கோபால். 

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 111
புணர்ச்சி மகிழ்தல்  
குறள் 1101
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

பொருள்:
கண்டும், கேட்டும், உண்டும், முகர்ந்தும், உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களின் இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடமே உள்ளன.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Saturday, April 25, 2020

1100. அவளும் நோக்கினாள்!

பெண் பார்த்து முடிந்ததும், மாப்பிள்ளை வீட்டார் கிளம்ப யத்தனித்தபோது, பெண்ணின் தாய் கௌரி தன் கணவன் பசுபதி அருகில் வந்து அவர் காதில் ரகசியமாக ஏதோ சொன்னாள்.

பசுபதி சற்றுத் தயங்கி விட்டு, பையனின் தந்தை ராமசாமியைப் பார்த்து, "நீங்க தப்பா நினைக்கலேன்னா, எங்க பொண்ணு கலா உங்க பையன்கிட்ட தனியாப் பேசணும்னு நினைக்கறா!" என்றார்.

"இதென்ன புது வழக்கமா இருக்கு? நாங்க கேள்விப்பட்டதில்லையே இப்படி?" என்றாள் பையனின் அக்கா சுமதி.  

பையனின் தாய் சுந்தரி தன் பெண்ணை முறைத்துப் பார்த்து விட்டுக் கணவனின் முகத்தைப் பார்த்தாள்.

மனைவியிடம் சம்மதம் கேட்பது போல் அவளைப் பார்த்து முக ஜாடை செய்த ராமசாமி, மனைவி அரைச் சம்மதத்துடன் தலையாட்டியதும், பசுபதியைப் பார்த்து, "அதுக்கென்ன பேசட்டுமே!" என்றார். 

பிறகு பெண்ணின் பெற்றோர் எதோ தப்பு செய்து விட்டதைப் போல் சங்கடப்பட்டுக் கொண்டிருப்பதை கவனித்த ராமசாமி, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, "இது நம்ப காலம் இல்லையே! 1970ஆம் வருஷம். சந்திரனுக்கே ராக்கெட் விட்டுட்டாங்க. இப்பல்லாம் கல்யாணத்துக்கு முன்னால பையனும் பெண்ணும் பேசிப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கறது சகஜம்தானே!  இதோ இருக்காளே என் பொண்ணு சுமதி அவளுக்குப் போன வருஷம்தான் கல்யாணமாச்சு. தன்னைப் பெண் பாக்க வந்தப்ப தான் இப்படிக் கேக்காம விட்டுட்டமேங்கற குறையிலதான் இது வழக்கமில்லையேன்னு சொல்லியிருக்கா. நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க!" என்று சொல்லி விட்டுத் தன் பெண் சுமதியைப் பார்த்துச் சிரிக்க, அவள் அவரை முறைத்தாள். 

க்கத்தில் இருந்த அறைக்குக் கலா முதலில் செல்ல, பிறகு சேகர் சென்றான். அந்த அறை மற்றவர்கள் அமர்ந்திருந்த முன்னறைக்குப் பின்னால் அமைந்திருந்ததால் இவர்களை யாரும் பார்க்க முடியாது. இவர்கள் பேசுவதும் யாருக்கும் கேட்காது. 

அந்த அறையில் நாற்காலி ஏதும் இல்லை. கலா சுவர் ஓரத்தில் போய் நிற்க, அவளுக்கு எதிரில் போய் நின்றான் சேகர்.

பெண் பார்க்கும் படலத்தின்போது குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்த கலா இப்போது தலை நிமிர்ந்து அவன் முகத்தை நேரே பார்த்தாள். சற்று நேரம் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தாள். சேகருக்கு அவள் அப்படிப் பார்த்தது சங்கடமாக இருந்தாலும், அவனும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து, "சரி. வாங்க போகலாம்!" என்றாள் கலா.  

"என்ன கலா? எங்கிட்ட எதோ பேசணும்னு சொல்லி இங்க அழைச்சுக்கிட்டு வந்துட்டு, சும்மா ரெண்டு நிமிஷம் பாத்துக்கிட்டே இருந்துட்டு போகலாங்கற?" என்றான் சேகர் வியப்புடன். 

"எல்லார் முன்னாலயும் உங்க முகத்தை சரியா பாக்க முடியல. உங்களை நேருக்கு நேரா பாக்கணுங்கறதுக்காகத்தான் உங்ககிட்ட தனியா பேசணும்னு சொன்னேன். கொஞ்ச நேரம் உங்களை நேருக்கு நேராப் பாத்ததிலேயே உங்ககிட்ட பேசி உங்களைப் புரிஞ்சுகிட்ட திருப்தி கிடைச்சுடுச்சு எனக்கு!" என்று சொல்லிச் சிரித்த கலா, "ஆமாம். நீங்களும் எதுவும் பேசலியே? இப்ப ஏதாவது கேக்கணுமா?" என்றாள்.

"வேண்டாம்! எனக்கும் உன்னை மாதிரிதான் தோணுது. உள்ள வரப்ப, உன்கிட்ட தனியாப் பேசணுங்கற ஆசையிலதான் வந்தேன். ஆனா உன்னைப் பாத்துக்கிட்டே இருந்ததில அந்த ஆசையெல்லாம் அடங்கிப் போயிடுச்சு!" என்று சொல்லிச் சிரித்தான் சேகர்.

சிரித்தபடியே சேர்ந்து நடந்து வந்த இருவரையும், இருவரின் பெற்றோர்களும் வியப்புடனும், மகிழ்ச்சியுடனும் பார்த்தனர். 

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல்  
குறள் 1100
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல
பொருள்:
காதலர்கள் ஒருவர் கண்ணால் மற்றவர் கண்ணை நோக்கி ஒன்று பட்ட உணர்வு கொண்டு விட்டால், அதற்குப் பிறகு வாயால் பேசிக்கொள்ளும் சொற்களுக்கு ஒரு பயனும் (தேவையும்) இல்லை.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

Thursday, April 9, 2020

1099. நிச்சயதார்த்தம்

"நாளைக்கு எனக்கு நிச்சயதார்த்தண்டி. மறந்துடாதே!" என்றாள் ரேணுகா.

"மறக்கறதாவது. நீ எப்பவுமே மறக்க முடியாத அளவுக்கு நாளைக்கு உன்னைக் கலாய்க்கறதுக்குத் திட்டமெல்லாம் தயாரா வச்சிருக்கேன்! இவளை ஏன் கூப்பிட்டோம்னு நீ அழப் போற பாரு!" என்றாள் நிகிதா.

றுநாள் நிச்சயதார்த்தத்தின் போது, நிகிதா தான் சொன்னபடியே, தன் தோழி ரேணுகாவை ஏகமாக கலாட்டா செய்தாலும், ரேணுகாவுக்கு அது ஒரு உற்சாகமான அனுபவமாகவே இருந்தது.

நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த தன் அலுவலக நண்பர்களை நிகிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ரேணுகா. அவர்களில் பலர் திருமணமானவர்கள். திருமணம் ஆகாதவர்கள் இரண்டு பேர்தான் - சினேஹா, முகேஷ்.

சினேஹாவிடம் மட்டும் நிகிதா அதிகம் பழகியதை ரேணுகா கவனித்தாள். முகேஷ் தனியாக ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தான். பொதுவாக எல்லோரிடமும் நன்றாகப் பழகும் நிகிதா தனியாக உட்கார்ந்திருந்த முகேஷிடம் சற்றுப் பேசிக் கொண்டிருந்தால், அவன் தனிமையாக உணர்ந்திருக்க மாட்டானே என்று நிகிதாவுக்குத் தோன்றியது.

சில வாரங்களுக்குப் பிறகு நிகிதாவுக்கும், முகேஷுக்கும் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாக அறிந்து ரேணுகா ஆச்சரியப்பட்டாள்.

"எப்போடீ நிச்சயமாச்சு?" என்று நிகிதாவிடம் கேட்டாள் ரேணுகா.

:"கல்யாணம் நிச்சயமானது இப்பதான்..." என்று இழுத்தாள் நிகிதா.

"அப்படீன்னா?" என்றாள் ரேணுகா.

"நாங்க ரொம்ப நாளாப் பழகிக்கிட்டிருக்கோம்!" என்றாள் நிகிதா.

"அடிப்பாவி! ரொம்ப நாளாக் காதலிக்கிறீங்களா? எங்கிட்ட சொல்லவே இல்லையே!" என்ற ரேணுகா, சட்டென்று நினைவு வந்தவளாக, "ஆமாம், என் நிச்சயதார்த்தத்தில உன்னை நான் முகேஷுக்கு அறிமுகப் படுத்தினேன். அப்ப நீங்க ரெண்டு பேரும் முன்னாடியே அறிமுகமானவங்க மாதிரி காட்டிக்கல. அதோட ரெண்டு பேரும் பேசிக்கக் கூட இல்ல. சம்பந்தம் இல்லாதவங்க மாதிரி ஒதுங்கி இருந்தீங்க?" என்றாள்.

"பின்னே, எல்லார் முன்னேயும் நாங்க காதலர்கள்னு காமிச்சுக்கணும்னு சொல்றியா?" என்றாள் நிகிதா.

காமத்துப்பால் 
களவியல் 
அதிகாரம் 110
குறிப்பறிதல் 
குறள் 1099
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

பொருள்:
பொது இடத்தில் ஒருவரை ஒருவர் அந்நியர் போல் பார்ப்பது காதலர்களுக்கே உரித்தான இயல்பாகும்.
அறத்துப்பால்                                                                     பொருட்பால்        

1309. நிழலின் அருமை!

"உங்களுக்கு சமைக்கத் தெரியுங்கறதுக்காக என் சமையல்ல குத்தம் கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்காதீங்க. வேணும்னா நீங்க சமையுங்க. நான் உக்காந்து ...